Udayar, Moopanar, Nainar

Parkavakulam ( Udayar, Moopanar, Nainar)

Monday, May 7, 2018

முனைவர் மு.பொன்னவைகோ

முனைவர் மு. பொன்னவைக்கோ இவர் தென்னாற்காடு மாவட்டத்தில் செங்கமேடு என்னும் சிற்றூரில் பெருநிழக்கிழார் முருகேச உடையார் அவர்களுக்கும், அருள்நிறை பொன்னிக்கண்ணு அம்மையாருக்கும் இளைய மகனாய்ப் பிறந்தவர். சொந்த ஊரில் அரசுப் பள்ளியில் தொடக்கக் கல்வியும், வழுதாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக்கல்வியும், மீனம்பாக்கம் அ.மா.ஜெயின் கல்லூரியில் புகுமுக வகுப்பும், கிண்டி பொறியியல் கல்லூரியில் இளநிலை (B.E.), முதுநிலை(M.Sc. (Eng) மின்பொறியீயல் கல்வியும், தில்லி இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் முனைவர் ஆய்வுப் படிப்பையும்( Ph.D) பயின்று பொறியாளர் ஆனவர். நாற்பது ஆண்டுகளாக இந்திய, வெளிநாட்டு நிறூவனங்கள் பலவற்றில் திட்டப் பொறியாளராக, திறமையான அதிகாரியாக, அறிவுரைஞராக, ஆய்வுநெறிகாட்டியாக , இயக்குநராக, துணைவேந்தராகப் பணியாற்றிய பெருமை பெற்றவர். சிறந்த ஆய்வாளர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியவர். நாற்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுத்திட்டங்களை மேற்கொண்டவர். மின்னமைப்பு வடிவமைப்பில் பல புதிய கண்டுபிடுப்புகளைக் கண்டுபித்தவர். அவர் கண்டுபிடிப்புகள் அவரது பெயரால் ”கோ மாதிரிகள்” என வழங்கப்படுகின்றன. உயர்கல்வி மேம்பாட்டிற்குப் பல திட்டங்களை வழங்கியவர். தமிழ்கப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பில் படிப்போர்க்கு ஆற்றல் கல்வி வழங்கி, பட்டம் பெற்றவுடன் பணியில் சேர வழி வகுத்தவர். பட்டப்படிப்பில் பயில்வோர் எம்மொழியினராயினும் தமிழைக் கட்டாயம் பயிலப் பாடத்திட்டம் வழங்கியவர். தனியாத தமிழ்ப் பற்றால் கணித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் முதல் இயக்குநர். இணையவழிக் கலிவிக்கு முதன் முதலாக வித்திட்டவர். புதிது புதிதாகப் புதுமைகளைப் படைப்பவர். உத்தமம் அமைப்பிற்குப் பெயர் சூட்டியவர். உலகத் தமிழ் தகவல் தொழிநுட்ப மன்றம்( உத்தமம்) International Fourm for Information technology in Tamil( INFITT) ஆசிரியரின் கணிப்பொறி சார்ந்த நூல்கள் 1. கணிப்பொறியியல் 2. கணிப்பொறியும் தகவல் தொடர்பியலும் 3. HTML- ஓர் அறிமுகம் 4. C மொழி 5. ஸ்டார் ஆபிஸ் 6. விஷீவல் பேசிக் 7. ஜாவா 8. அறிவியல் தமிழ்க் கலைச்சொற்கள் 9. தமிழ்க் கணிப்பொறி மொழிகள் 10. இணையத் தமிழ் வரலாறு. பிற நூலகள் 1 பொன்னவைக்கோ கவிதைகள் 2. மெல்லத் தமிழ் இனி வெல்லும் 3. அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்.

டி.எஸ்.சாமிநாத உடையார்


மன்னை தேசிய மேநிலைப் பள்ளி பற்றிய ஆவண பட முயற்சி பாராட்டுக்குரியது.

அதற்காக மன்னையின் மைந்தர்கள்  அமைப்புக்கு வாழ்த்துக்கள் . அன்றய காலகட்டத்தில் மேல தஞ்சை மாவட்டத்தின் மிக பெரிய செல்வந்தர் குடும்பம் என பெயர் பெற்ற தண்ணீர்குண்ணம் உடையார் குடும்பத்தை சேர்ந்த T .S .சிங்காரவேலு உடையார் இப்பள்ளியை தொடங்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்.மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி முதலில் கீழராஜ  வீதியில் இருந்த பள்ளி நிறுவனர் சிங்காரவேலு உடையார் அவர்களின் இல்லத்தில் தான் முதலில் தொடங்கப்பட்டது. பின்னர் தற்போது உள்ள இடத்திற்கு மாறியது.

1952ஆம் ஆண்டு மறைந்த பள்ளி நிறுவனர் சிங்காரவேலு உடையார்  மகனும்  மன்னார்குடி நகருக்கு பல வழிகளில் பெருமை சேர்த்த ஐயா   T .S .சுவாமிநாத உடையார் இப்பள்ளியின் செயலர்  மற்றும்  தாளாளராக பொறுப்பேற்றார் . அது முதல், இப்பள்ளி வளர்ச்சியின் உச்சத்தை எட்ட தொடங்கியது.   1957 ஆம் ஆண்டு V.சீனிவாசனை பள்ளியின் தலைமை ஆசிரியராக நியமித்தார். நல்ல திறமையான ஆசிரியர்களை கண்டறிந்து வேலை வாய்ப்பு அளித்து இப்பள்ளியில் நல்ல தரமான கல்வி கிடைக்க வழி வகை செய்தது சுவாமிநாத உடையார் ஐயா தான் என்றால் அது மிகையாகாது.  ஐயா T.S.சுவாமிநாத உடையாரின் சகோதரர் கடுகு சார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட T .B .சிவசாமி அவர்கள் உடற்கல்வி ஆசிரியராக இருந்த போதுதான் இப்பள்ளி விளையாட்டு துறையில் மாநில  அளவில் பல சாதனைகளை படைத்தது.

 42 ஆண்டுகள் தாளாளராக இருந்த சுவாமிநாத உடையார் ஐயா காலத்தில் பள்ளியின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வளர்ச்சி திட்டங்களும் நடந்தது, அவர் காலத்தில் தான் 1978ல் உயர் நிலை பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. மன்னார்குடி மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த பல மாணவர்களின் கல்விக்கு வித்திட்டவர் உடையார் ஐயா அவர்கள். தேசிய மேனிலைப் பள்ளியையும் . ஐயா சுவாமிநாத உடையாரையும் பிரித்து பார்க்க இயலாது, இப்பள்ளியை பற்றி பேசும் போதும், எழுதும் போதும் சுவாமிநாத உடையரும் சேர்ந்தே பேசப்படுவார் .

ஐயா T .S .சுவாமிநாத உடையார் அவர்கள்  மன்னை நகரின் நகராட்சி தலைவராகவும் , சட்டமன்ற உறுப்பினராக 1957 முதல் 1971 வரை மூன்று முறை இருந்துள்ளார். அவரின் அரசியல் தொடர்பின் காரணமாக அப்போதைய தமிழக முதல்வர்கள் திரு.காமராஜ், திரு.பக்தவச்சலம் , திரு.அறிஞர் அண்ணா மற்றும் திரு.கலைஞர் உள்ளிட்டோர் இப்பள்ளிக்கு வருகை தந்து பெருமை சேர்த்தனர்.

செண்பகக்கொல்லை உடையார்...

செண்பக கொல்லை உடையார்........

திருவண்ணாமலை மாவட்டத்து திருக்கோயிலூர் எனும் ஊர் சங்கத்தமிழ் நூல்களில் திருக்கோவலூர் எனக் குறிக்கப்பெறுகின்றது. கோவல் வீரட்டம் எனச்  சைவர்கள் போற்றும் கீழூர் வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலும், உலகளந்தபெருமாள் நின்றருளும் வைணவர்கள் போற்றும் விண்ணகரமும் இவ்வூருக்கு இரு  கண்களாக விளங்குகின்றன.

தென்பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருக்கோவலூரின் மேற்குப்பகுதி தற்போது நகரமாக விளங்குகின்றது. கீழூர் ஆரவாரமின்றி அமைதியாகக்  காணப்பெறுகின்றது. சோழர் கல்வெட்டுகள் கீழூரை, கீழைச்சேரி என்றும், மேலூரை மேலைச்சேரி என்றும் குறிப்பிடுகின்றன. கீழூர் மதுராந்தக சதுர்வேதி மங்கலம்  என்ற பெயரிலும், மேலூர் நகரம் திருக்கோவலூர் என்றும் அழைக்கப் பெற்றதைச் சோழர் சாசனங்கள் எடுத்துரைக்கின்றன.

மலாடு அல்லது மிலாடு என்ற பண்டைய நாட்டுப் பகுதியில் குறுக்கைக் கூற்றத்தில் திருக்கோவலூர் திகழ்ந்தது. மிலாடு என்ற நாட்டின் அரசர்களாக  மலையமான் அரசர்கள் திகழ்ந்தனர். அவர்களைச் சேதிராயர் என்றும், மிலாடுடையார் என்றும் கல்வெட்டுகளும், இலக்கியங்களும் குறிக்கின்றன. அறுபத்து மூன்று  நாயன்மார்களில் ஒருவர் திருக்கோவலூர் மலையமான் குலத்தில் உதித்தவர் ஆவார். சிவனடியார் வேடத்தில் வஞ்சக எண்ணத்துடன் வந்த முத்தநாதன் தன்னை  வாள் கொண்டு குத்திய போதிலும் அவனைக் காப்பதற்காக தன் மெய்க்காவலனிடம் ‘‘தத்தா நமரே காண்’’ என்று கூறிய மெய்ப்பொருள் நாயனார்,  மலையமான் மன்னரே.

சிவபெருமானின் வீரச்செயல்கள் எட்டெனத் தொன்னூல்கள் உரைக்கின்றன. அவ்வீரச் செயல்கள் நிகழ்ந்த தலங்களை ‘அட்ட வீரட்டம்’ எனக் குறிப்பர். சலந்தரன்  எனும் அரக்கனின் ஆணவத்தை அடக்க சக்கரம் ஒன்றைத் தோற்றுவித்து அவன் உடல் பிளந்து பின்பு அவனுக்கு அருளிய வீரச்செயல் நிகழ்ந்த தலமே  திருக்கோவல் வீரட்டமாகும். அதனால்தான் கீழூர் சிவாலயத்தை வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலென கல்வெட்டுகளும் இலக்கியங்களும் குறிக்கின்றன.  பெண்ணையாறு இத்திருக்கோயிலின் மதிலினை முத்தமிட்டவாறு ஓடுகின்றது.

கோயிலை ஒட்டியுள்ள நதித்துறையின் எதிரே ஒரு பெரிய பாறையும் அதன்மேல் கபிலேஸ்வரம் எனும் சிறு கோயிலும் உள்ளன. அப்பாறையினை ராஜராஜ  சோழனின் கல்வெட்டு கபிலக்கல் என்று குறிப்பிடுகிறது. அழகிய ராஜகோபுரம், திருமதில், இரு திருச்சுற்றுகள், மண்டபங்கள், பரிவாராலயங்கள், பெரிய நாச்சியார்  எனும் பிரஹன் நாயகி அம்மன் கோயில் ஆகியவற்றுடன் வீரட்டானேஸ்வரரின் கருவறை அழகிய கற்றளியாகக் காட்சி நல்குகிறது. சிவாலயத்துக்குரிய எல்லா  செப்புத் திருமேனிகளும் இங்கு காணப்பெறுவதோடு சலந்தர வதம் செய்த மூர்த்தியின் திருவுருவும் இங்கு இடம்பெற்றிருக்கிறது.

பல்லவப் பேரரசர்கள் காலந்தொட்டு திகழும் இப்பழைய ஆலயத்தில் மூன்றாம் நந்திவர்ம பல்லவனின் கல்வெட்டுகள் காணப்பெற்றாலும் தற்போது காணப்பெறும்  கற்றளி முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் புதுப்பிக்கப் பெற்றதாகும். அதனால்தான் இவ்வாலயத்தில் ராஜராஜ சோழன் காலந்தொட்டு வெட்டுவிக்கப்பெற்ற  கல்வெட்டுச் சாசனங்கள் மிகுந்த அளவில் காணப்பெறுகின்றன. இக்கோயிலுக்குரிய தலபுராணம் திருக்கோயிலூர் புராணம் என்ற பெயரில் உள்ளது.

கி.பி. 16ம் நூற்றாண்டில் வடமொழியில் திகழ்ந்த திருக்கோயிலூர் புராணத்தை தமிழில் பாடல்கள் வடிவில் மொழி பெயர்த்தனர். பின்னாளில் அச்சுவடி நூலில் பல  சிதைவுகள் ஏற்பட்டு வேட்டவலம் ஜமீன்தாரிடம் அழியும் நிலையில் இருந்ததை தஞ்சாவூர் மாவட்டம் செண்பகக் கொல்லை செளந்தரராஜ உடையார் என்ற  தமிழறிஞர் செப்பம் செய்து இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பதிப்பித்து அந்நூலைக் காப்பாற்றினார். பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் போன்ற  பேரறிஞர்கள் அந்நூலுக்குச் சாற்றுக்கவி அளித்து போற்றியுள்ளனர்.

திருக்கோயிலூர் புராணத்தில் இராம இலக்குவர் பூஜித்த லிங்கமே திருக்கோயிலூர் வீரட்டானேஸ்வரர் என்று குறிக்கப் பெற்றுள்ளது. இச்சிவாலயத்திலுள்ள  கணபதிப் பெருமான் அவ்வையாருக்கு துணை புரிந்ததும் கூறப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவபெருமான் அனுப்பிய யானை மீது ஏறி கயிலை செல்ல  முற்பட்ட போது, அவ்வையார் கணபதியிடம் வேண்ட அவர் தன் துதிக்கையால் அவ்வைப் பாட்டியைப் பற்றி சுந்தரர் கயிலை செல்வதற்கு முன்பாகவே இவரை  கயிலையில் விட்டார் என்றும், இந்திரன் தன் சாபம் நீங்க பூஜை செய்த தலம் இதுவென்றும் கூறப்பெற்றுள்ளது.

திருக்கோயிலூர் அரசரின் புதல்வர்களாகப் பிறந்த மலையமான், நந்தமான் என்ற இருவர் மரபுதான் கோயிலூர் அரச மரபு என்றும் இப்புராணம் விளங்குகின்றது.  அதில் கூறப் பெறுகின்ற ஒரு முக்கிய புராணக் கதை, கோயிலுக்கு அருகே பெண்ணையாற்றில் காணப்பெறும் கபிலர் பாறை பற்றியதாகும். விண்ணக கங்கையை  மண்ணகத்துக்குத் தவ வலிமையால் கொண்டு வந்த பகீரதனின் முன்னோர்களான சகர சாகரர் பத்தாயிரம் பேரையும் பாதாள லோகத்தில் தன் ஆஸ்ரமத்தில்  இருந்த கபில முனிவர் இந்திரனின் சூழ்ச்சி காரணமாக தவறாக தன் சாபத்தால் எரித்தாராம்.

பின்பு உண்மை தெரியவே தன் தோஷம் நீங்க திருக்கோவலூர் வந்து பெண்ணையாற்று பாறை மீது லிங்கஸ்தாபனம் செய்து பூஜித்து கடுந்தவம் இயற்ற அவர்  சாப விமோசனம் ெபற்றதாகத் திருக்கோயிலூர் புராணம் கூறுகின்றது. மேலே குறிப்பிட்ட புராணக் கதைகளின் காட்சிகளைக் கோவலூர் வீரட்டானேஸ்வரர்  கோபுரவிதானத்தில், தமிழில் எழுதப் பெற்ற எழுத்துக் குறிப்புகளுடன் 200 ஆண்டுகளுக்கு முன்பு வண்ண ஓவியங்களாகத் தீட்டியிருந்தனர்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு அவ்வோவியக் காட்சிகளை இக்கட்டுரையாசிரியர் படமெடுத்து பாதுகாத்து வைத்துள்ளார். ஆனால் பின்னாளில் நிகழ்ந்த  திருப்பணிகளின் போது அவை முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டன. அவ்வோவியக் காட்சிகளில் ஒளவையார் கணபதியை பூஜிப்பது, கயிலைக்கு செல்வது, இராம  இலக்குவர் பூஜிப்பது, கபில முனிவர் பாறை மீது லிங்கபூஜை செய்வது ஆகிய காட்சிகள் உள்ளன. கபிலமுனி கபிலேஸ்வரம் எனும் பாறை மீதுள்ள கோயிலில்  வழிபடும் ஓவியக்காட்சி மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

வீரட்டேஸ்வரர் கோயிலில் உள்ள இராஜராஜனின் கல்வெட்டு சாசனப் பாடல் முழுவதையும் நாம் காணும் போது சங்ககால கபிலர் எனும் தமிழ்ப் புலவரின்  வரலாறு அப்பாறையுடன் (கபிலக்கல்) எவ்வாறு பின்னிப் பிணைந்திருந்தது என்பது பற்றியும், பின்னாளில் ஏற்பட்ட இருண்ட இடைக்காலம் ஒன்றால் பழைய  வரலாற்றை மறந்து கபிலமுனியின் புராணம் இங்கு இடம் பெற்றது என்பதையும் நாம் அறியலாம்.

திருக்கோவலூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஏறத்தாழ எண்பது கல்வெட்டுச் சாசனங்களை இந்திய கல்வெட்டுத் துறையினர் படி எடுத்து பாதுகாத்து  வைத்துள்ளனர். அவற்றுள் ஒரு கல்ெவட்டே இராஜராஜசோழனின் அவையில் அறங்களை எடுத்துக் கூறும் அதிகாரியான கம்பன் மணியனான மஹிமாலய  மூவேந்த வேளான் செய்த அறச்செயல்களை விவரிப்பதாகும்.

முழுவதும் பாடல்களாகவே அமைந்த இந்த கல்வெட்டில் திருக்கோவலூரின் பெருமை, வீரட்டேஸ்வரர் ஆலயத்தின் இருப்பிடம், இராஜராஜனின் வெற்றிகள்,  அவன் தாய் வானவன் மாதேவி திருக்கோவலூர் மலையமானின் புதல்வி என்பது, அத்தேவி சுந்தரசோழரின் உடல் எரியூட்டப் பெற்றபோது தீப்பாய்ந்து  தெய்வமானவர் என்பது, கபிலக்கல்லின் சிறப்பு, மஹிமாலய மூவேந்த வேளாண் செய்த அறக்கொடைகள், அவன் தங்கத்தால் இலிங்கம் செய்து பொற்பூக்களால்  இத்தலத்தில் அர்ச்சனை புரிந்தது ஆகிய அனைத்தும் அழகு தமிழில்
எடுத்துரைக்கப் பெற்றுள்ளன.

பிருகு மகரிஷி....

பார்க்கவன் பொருள்...... மஹரிஷி வரலாறு ..

உலகம் தோன்றிய கால
த்தில் படைக்கும் கடவுளான பிரம்மதேவரால் உருக்கப்பட்டவர் பிருகு முனிவர். "பிருகு என்னும் சொல்லுக்கு, "கடுமையான தவசக்தியால் பாவங்களைப் பொசுக்குபவர் என்று பொருள். பஞ்சபூதங்களில் அக்கினியுடன் பிருகு மகரிஷி பிறந்ததாக வேதங்கள் கூறுகின்றன.

பிருகு மகரிஷி கியாதி என்ற பெண்மணியை மணந்து கொண்டார். இந்த தம்பதிக்கு மகாலட்சுமியே மகளாகப் பிறந்தாள். பின் விஷ்ணுவை மணந்து கொண்டாள். இதனால் உலகத்தைக் காக்கும் ஸ்ரீவிஷ்ணுவுக்கு ""மாமனார் என்ற பெருமை பெற்றவர் இவர். பிருகுவின் பெயரால் தான் லட்சுமிக்கு "பார்கவி என்ற பெயர் ஏற்பட்டது.
மகாபாரதத்தில் பிருகு மகரிஷிக்கும் பரத்வாஜ முனிவருக்கும் நடந்த வாக்குவாதம் மிகவும் சிறப்பானது. இதற்கு"" பிருகு பரத்வாஜ சம்வாதம் என்று பெயர். இப்பகுதி தத்துவக் கருத்துக்களை எடுத்துச் சொல்லும் பகுதியாக அமைந்துள்ளது. கடவுளைப் பற்றி சொல்வதில் இவர் தனிப்பெயர் பெற்றவராக இருக்கிறார்.

சூதபவுராணிகர் என்ற முனிவர் புராணக் கதைகளை உலகிற்கு வழங்கினார். இந்தக் கதைகளைக் கேட்டு உலகிற்கு தந்தவர் பிருகு வம்சத்தில் பிறந்த சவுனகர் என்பவர் ஆவார். இவர் இல்லாவிட்டால் புராணக்கதைகளே நமக்கு கிடைத்திருக்காது. என்றும் பதினாறு வயது என்ற பெருமைக்கு உரிய மார்க்கண்டேய மகரிஷியும் பிருகு வம்சத்தவர் தான். விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் பரசுராமரும் இவரது வம்சத்தில் தான் அவதரித்தார். பிருகு எனப்படும் பார்கவ வம்சத்தில் அவதரித்ததால் பரசுராமருக்கு "பார்கவ ராமன் என்ற பெயரும் உண்டு. விருத்திராசுரனைக் கொல்ல தன் முதுகெலும்பினையே இந்திரனிடம் கொடுத்து, தன்னையே மாய்த்துக் கொண்ட ததீசி முனிவரும் பிருகுவம்சத்தில் தோன்றியவரே. ஜனமேஜயர் செய்த சர்ப்பயாகத்தை நடத்தி வைத்த உதங்கமுனிவர் இவ்வம்சத்தவர் தான். இப்படி புராணங்களில் இடம்பெற்ற எத்தனையோ மகரிஷிகள் பிருகுவம்சத்தில் அவதரித்துள்ளனர்

ஒளி விளக்கு ஏற்றிய உடையார்...

சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்....

தஞ்சை மாவட்டம், நன்னிலம் வட்டம் செல்வபுரம் என்னும் சிற்றுரில் 1888 சூன் திங்கள் முதல் நாள் பன்னீர்செல்வம் பிறந்தார். இவர் பார்க்கவ குலம் உடையார் வகுப்பைச் சேர்ந்தவர் . பள்ளிப் படிப்பைத் தஞ்சை மாவட்டத்தில் முடித்துத் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.

உயர்நிலைப் பள்ளித் தேர்வை முடித்தவுடன் பொன்னுப் பாப்பம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

panneerselvam 400கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் , இலண்டன் சென்று "கிரேஸ்கின்' சட்டக் கல்லூரியில் பார் – அட்–லா பட்டத்தைப் பெற்றார். 1912 இல் தாயகம் திரும்பினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில வழக்கறிஞராகப் பதிவு செய்து, தஞ்சை நகரில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார்.

1916 இல் தொடங்கிய நீதிக்கட்சியின் செயல்பாடுகளை ஊன்று கவனித்து வந்த பன்னீர்செல்வம் அதன் கொள்கைகள் திட்டங்கள் ஆகியவற்றால் பெரிதும் கவரப்பட்டார். நீதிக்கட்சியின் மாநாடுகளில் பங்கு பெறத் தொடங்கினர்.

தஞ்சை நகரில் செயல்பட்ட பொதுநல அமைப்புகளில் பங்கு பெற்றுப் பொதுத் தொண்டுகள் ஆற்றினார். அரசு வழக்கறிஞராகச் சில ஆண்டுகள் பணிபுரிந்தார்.

1918 இல் தஞ்சை நகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றினார். 1924 முதல் 1930 வரை தஞ்சை மாவட்ட ஆட்சிக் கழகத்தின் தலைவராகப் பல அருட்பணிகளை நிறைவேற்றினார்.

1916 இல் தொடங்கிய நீதிக்கட்சி 1920 இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. அதேபோல் 1929 இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. நீதிக்கட்சியின் வெற்றிக்குப் பன்னீர்செல்வம் துணைநின்றார்.

காங்கிரசுக் கட்சியில் பிராமணரல்லாதவருக்கு எந்தப் பயனும் இல்லை என்பதை அறிந்து தந்தை பெரியார் 1925 ஆம் ஆண்டு காங்கிரசுக் கட்சியைவிட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட முடிவெடுத்தார். சர் பன்னீர்செல்வம் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து பெரியாருடன் செயல்பட்டார்.

நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் தனித்தனியே செயல்பட்டாலும், தந்தை பெரியார் நீதிக்கட்சிக்கு துணையாக இருந்தார்.

1929 ஆம் ஆண்டில் செங்கற்பட்டில் நடைபெற்ற முதலாவது மாகாணச் சுயமரியாதை மாநாட்டில் இளைஞர் அரங்கத்திற்குப் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி உரையாற்றினார்.

1930 இல் லண்டனில் நடைபெற்ற முதல் வட்ட மேஜை மாநாட்டில் நீதிக்கட்சியின் சார்பில் கலந்து கொண்டு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மற்றும் தனித்தொகுதி கேட்டு உரையாற்றினார். 1931 இல் நடைபெற்ற இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
1930 முதல் சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்தில் தீர்மானங்கள் மீது அவர் ஆற்றும் உரை அனைவரையும் ஈர்க்கும். சில காலம் அமைச்சராகவும் செயல்பட்டார். 1937 இல் காங்கிரசுக் கட்சி ஆட்சியின் போது சட்டமன்ற எதிர் கட்சித் தலைவராகச் செயல்பட்டார்.

1938 இல் திருச்சியில் நடைபெற்ற "தமிழர் மாநாட்டில்' தலைமை தாங்கி அரியதொரு உரை நிகழ்த்தினார். இந்த மாநாட்டில்தான் "தமிழ்நாடு தனியாகப் பிரிக்கப்படவேண்டும்' என்கிற தீர்மானம் முதன் முதலில் நிறைவேற்றப்பட்டது.

1939 இல் நடைபெற்ற இரண்டாம் உலகப்பேõரின் போது ஆங்கிலேயே அரசின் போர்க்கால அமைச்சரவைக்கு ஆலோசகராகப் பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். இதற்கு நீதிக்கட்சி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு போருக்கும் ஆதரவு அளித்தது.

1940 சனவரி திங்களில் பன்னீர்செல்வம் இந்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 25 இல் சொந்த ஊரான செல்வபுரத்திலிருந்து புறப்பட்டுச் சென்னை வந்தடைந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பம்பாய்சென்று அங்கிருந்து விமானத்தில் கராச்சியிலிருந்து வைஸ்ராய் அனுப்பி வைத்த விமானம் மூலம் மார்ச்சு திங்கள் முதல் நாள் காலை  5.00 மணியளவில் “ஹணபால்'' விமானம் மூலம் லண்டன் புறப்பட்டார். அவருடன் 4 இராணுவ அதிகாரிகளும் 3 அரசு உயர் அதிகாரிகளும் இருந்தனர். அவர் சென்ற விமானம் மாலை 3.00 மணியளவில் "சார்ஜா' அடையவேண்டும். ஆனால், இயந்திரக் கோளறினாலோ அல்லது ஜெர்மன் படையின் தாக்குதலாலோ "ஓமன்' கடலில் அவ்விமானம் விழுந்து மூழ்கியது. அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.

சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் தமிழ்வேள் உமா மகேசுவரனுடன் இணைந்து தஞ்சை மாவட்டத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். இவர்கள் இருவரும் “தஞ்சை இரட்டையர்'' என்ற பெயரில் நீதிக்கட்சிக்காகப் பாடுபட்டார்.

தஞ்சையை ஆண்ட அரசர் பரம்பரையினரால் அமைக்கப்பட்ட திருவையாறு கல்லூரியில் "சமஸ்கிருதம்' மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. அதனை மாற்றி அங்குத் தமிழும் பயிற்றுவிக்கப்படும் நிலையைப் பன்னீர்செல்வம் உருவாக்கினார். மேலும் "சமஸ்கிருதக் கல்லூரி' என்று இருந்த பெயரை “அரசர் கல்லூரி' என்றும் பெயர் மாற்றினார்.

தஞ்சை மாவட்டத்தில் அரசர்கள் கட்டிய சத்திரங்களில் உயர்சாதி பிராமணர்களுக்கு மட்டும்தான் உணவு வழங்கப்படும் என்ற நிலையை மாற்றி எல்லா வகுப்பினருக்கும் உணவு கிடைக்கும்படிச் செய்தவர் நமது பன்னீர்செல்வமே.

தஞ்சை ஆதி திராவிடர் மாணவர்களின் நலன்காக்க அவர்களுக்கு "உணவு விடுதி' ஒன்றை ஏற்படுத்தி அந்த வகுப்பு மாணவர்கள் கல்வி உயர்வுக்குப் பாடுபட்டார். தஞ்சை மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவராகவும் அவர் சில காலம் பணியாற்றினார்.

சர்.ஏ.டி. பன்னீர்செல்வத்தின் மறைவு, தமிழர்களுக்கும் நீதிகட்சியினர்களுக்கும் பெரியார் அவர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்தது

மலையமான் திருமுடிக்காரி

மலையமான் திருமுடிக்காரி....

            இன்றைய விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி இரு நாடுகளாக இருந்துள்ளது. அவற்றுள் ஒன்று, மலையமான் நாடு என்ற ‘மலாடு’ என்னும் பெயர் கொண்டிருந்த ‘பெண்ணையம் படப்பை நாடு’; இன்னொன்று ஓவியர்மா நாடு என்ற ‘ஓய்மாநாடு’ ஆகும்.

மலையமான் நாடு :
            மலாடு, இன்றைய கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், சங்கராபுரம், விழுப்புரம், உளுந்தூர் பேட்டை பகுதிகளையும் கல்வராயன் மலைப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்திருக்கிறது எனலாம். ஓய்மாநாடு கடற்கரைப்பகுதியை அடுத்த புதுச்சேரி, திண்டிவனம், செஞ்சி ஆகிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்டிருந்திருக்கிறது என்று கூறலாம்*.
            மலையமான் நாட்டின் தலைநகராக திருக்கோவலூர் இருந்திருக்கிறது. இப்போது, திருக்கோயிலூர் என்றும் திருக்கோவிலூர் என்றும் அழைக்கப்படும் இவ் ஊர், கழக இலக்கியங்களிலும், தேவாரத் திருப்பதிகங்களிலும் திருக்கோவலூர், கோவல் நகர், கோவல் என்று குறிக்கப் பட்டுள்ளதைக் காண்கிறோம். மலையமான் நாட்டில் பல ஊர்கள் சிறப்புடையனவாக இருந்தன. கோவலூர்த் தென்பெண்ணை யாற்றின் தென்மேற்கில் இருந்ததாகக் கருதப்படும் பாதுகாப்பான முள்ளூர்க்குத் தலைவர் மலையமான் திருமுடிக்காரியாவார்.

மலையமான் திருமுடிக்காரி :
            மலாட்டை ஆண்ட சிறந்த மன்னர்களுள் மலையமான் திருமுடிக்காரி முகன்மையான அரசர் ஆவார். இவர் மலையமான் திருமுடிக்காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் காரி என்றும் அழைக்கப் படுபவர் ஆவார். காரி, சிறந்த வீரராகவும் உயர்ந்த வள்ளலாகவும் விளங்கியவர். இவ் அரசரைப் பற்றிய செய்திகளைக் கூறும் பல பாடல்களைக் கழக (சங்க) இலக்கியங்களில் காண்கிறோம்.

சான்றுகள் :
            மலையமான் நாட்டை அடுத்துள்ள வேணாட்டு(வேளிர் நாடு)ப் பகுதியில் ஆனிரை கோடலிலும் மீட்டலிலும் ஈடுபட்டு இறந்த வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் மிகுதியாக கிடைத்துள்ளன. அவற்றில் சில நடுகற்கள், கோவல் (கோவலூர்) மறவர்கள் போரில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்குச் சான்றாக விளங்குகின்றன*
            கோவல் பண்டைக்காலத்தில் பெருவழியில் அமைந்திருந்திருக்கிறது; வணிகத்திலும் சிறந்து விளங்கி இருந்திருக்கிறது. இப்பகுதியில் அகழ்வில் இப்போது கிடைக்கும் பலவகையான காசுகளில் கழகக்கால சேரர் காசுகளும், பாண்டியர் காசுகளும், சோழர் காலத்தைச் சேர்ந்த முத்திரை குத்தப்பட்ட காசுகளும், குசானர், சாதவாகனர்காலக் காசுகளும் கிடைக்கின்றன.    கோவலூருக்கு அருகிலுள்ள கரையப்பட்டு என்ற இடத்தில் இருநூறு (200) உரோமானியத் தங்கக் காசுகள் கிடைத்துள்ளதிலிருந்து கோவல், உரோமானியர்களோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தமை தெரிகிறது. இங்குக் கிடைத்துள்ள மலையமான் காசுகளைப் பற்றிய ஆய்வு நூல்களும் வெளிவந்துள்ளன*.

பாடியோர் :
            மலையமான் திருமுடிக்காரியின் சிறப்புகளைப் போற்றிப் பல புலவர்கள் பாடியுள்ளனர். அவர்களுள், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், கபிலர், குடவாயிற் கீரத்தனார், பரணர், கல்லாடனார், வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார், மாறோக்கத்து நப்பசலையார், பெருஞ்சித்திரனார் ஆகியோர் முதன்மையர் ஆவர்.

காரியும் கொல்லியும் :
            மலையமான் நாடான மலாட்டில் கொடுங்கால் என்ற நகரம் சிறந்து விளங்கியிருந்திருக்கிறது. திருமுடிக்காரி, கொல்லிமலையை ஆண்ட மன்னன் ஓரியைப் போரில் கொன்று, கொல்லிக் கூற்றத்தைச் சேரனுக்குத் தந்ததை அறிய முடிகின்றது.
            வளம் மிக்க மலாட்டுப் பகுதியினைக் கைப்பற்றவும், ஓரியைத் திருமுடிக்காரி போரில் கொன்றதற்குப் பழி தீர்க்கவும் அதிகமான் நெடுமான் அஞ்சி கோவலூரை முற்றுகையிட்டு வெற்றி கொண்டார். மலையமான் திருமுடிக்காரி கொடைத் திறன் மிக்கவர்; கடையெழு வள்ளல்களுள் ஒருவர். இவருக்குப் பின், இவர் மகன் சோழிய ஏனாதி திருக்கண்ணன் ஆட்சிக்கு வந்தார். இவர் காலத்தில் மலாடு சோழர்களின் ஆட்சிக்கு உடபட்டிருந்தது. புறநானூற்றுப் பாடல், சோழ மன்னன் முள்ளூர் மலையில் படையுடன் தங்கியிருந்ததைக் கூறுவதைக் கொண்டு, வரலாற்றுப் புதின எழுத்தாளர் ‘கல்கி’ அவருடைய ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தில் சில கதை நிகழ்வுகளை எழுதியுள்ளார்.

காரியும் கபிலரும் கல்வெட்டும் :
            கபிலருக்கு மலையமான் திருமுடிக்காரியுடன் நற்றொடர்பு இருந்தது. பறம்புமலை மன்னனான வள்ளல் பாரி மூவேந்தருடனான போரில் இறந்த பிறகு, பாரி மளரிர்க்கு மணமுடிக்கும் பொறுப்பைப் புலவர் கபிலர் ஏற்கிறார். ஆனால், மூவேந்தர்க்கும் அஞ்சி, பாரிமகளிரைச் சிற்றரசர் யாரும் மணம் புரிந்து கொள்ள முன்வரவில்லை.
            திருக்கோவலூர்த் தெய்வீகன் பாரிமகளிரை மணந்ததாக மரபுவழிக் கதைகள் கூறப்படுவதால், கபிலர் காலத்தவரான மலையமான் திருமுடிக்காரி இதற்கு துணையிருந்திருப்பதாக எண்ணலாம். பாரி மகளிரை ஒளவையாரோடு தொடர்பு படுத்திச் சொல்வதற்கும், திருமுடிக்காரியே பாரிமகளிரை மணந்ததாகச் சொல்வதற்கும் அடிப்படைச் சான்றெதுவும் இல்லை என்க.          திருக்கோவலூரில் உள்ள கீழையூர் வீரட்டானேசுவரர் கோயிலில் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட முதலாம் இராசராசனின் கல்வெட்டு உள்ளது. அதில், கபிலர் அங்கு வந்து மலையமானிடம் பாரியின் பெண்களை அடைக்கலப் படுத்திவிட்டு, அங்கு (கீழையூர் பெண்ணையாற்றுத் துறைக் கருகில் ஆற்றிலுள்ள) கல்லொன்றில் தீ வளர்த்து உயிர் நீத்தார் என்ற செய்தி கீழ்க்காணுமாறு குறிக்கப்பட்டுள்ளது :
            தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன்
            மூரிவண் தடக்கை பாரிதன டைக்கலப்
            பெண்ணை மலையற் குதவிப் பெண்ணை
            அலைபுனல் அழுவத்து அந்தரிட்சம்செல
            மினல்புகும் விசும்பின் வீடு பேறெண்ணி
            கனல்புகும் கபிலக் கல்லது*.
            இன்றும் அங்குப் பெண்ணையாற்றில் ஒரு சிறு குன்றும், குன்றின்மேல் ஏறிச் செல்ல படிக்கட்டுகளும் குன்றின் மேலே, கோயில் போன்ற அமைப்பும் அக் கோயிலைச் சுற்றிவர வழியும் உள்ளதைக் காணலாம். இதனை ஊர் மக்கள் ‘கபிலர் குன்று’ என்றும் ‘கபிலக் கல்’ என்றும் கூறுகின்றனர். இக் குன்றை இடைச்சி ஒருவரின் கதையோடு தொடர்பு படுத்தி, ‘இடைச்சிக் குன்று’ என்றும் அழைக்கின்றனர்.

Sunday, May 6, 2018

பிரான்மலை கோவில் கல்வெட்டுகளில் உள்ளவை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளன

கொடுங்குன்றம் (பிரான்மலை)


அருள்மிகு குயிலமுத நாயகி உடனுறை கொடுங்குன்றீசர்

மரம்: பலா மரம், உறங்காப் புளி
குளம்: தேனாடி

பதிகம்: வானிற்பொலி -1 -14 திருஞானசம்பந்தர்

பாண்டியநாட்டுத்தலம் இது பிரான்மலை என இக்காலத்து வழங்குகின்றது. மேலும் மதுரை, மேலூர் சிங்கம்புணரியிலிருந்து பேருந்துகளில் செல்லலாம். திருக்கோயில் அடிவாரத்தில் உள்ளது.

மகோதர மகரிஷியும், நாகராஜனும் வழிபட்ட தலம். அருணகிரிநாதர் திருப்புகழ் பெற்ற சுப்பிரமணியத் தலமாகும். மலை மேல் வைரவர் சந்நிதி மிக விசேஷம். சுவாமி சந்நிதியில் திருக் கல்யாணக்கோலம் சிறப்பானது. தேவசபா மண்டபம் என்ற ஒரு மண்டபம் இருக்கின்றது.

இறைவன்பெயர் கொடுங்குன்றீசர். தேவியார் குயிலமுத நாயகி. தேவாரம் `தனிற் பொலிமொழியாள்`` எனக் குறிப்பிடுகின் றது. இத்தலம் குன்றக்குடி திவண்ணாமலை ஆதீன அருளாட்சியி லுள்ளது.

கல்வெட்டு:

இத்தலத்தைப் பற்றியனவாக இருபத்தொரு கல்வெட்டுக்கள் அரசியலாரால் கி.பி. 1903 ஆம் ஆண்டில் படியெடுக்கப் பெற்றுள்ளன. அவற்றுள் எட்டுக் கல்வெட்டுகள் ஆராய்ந்து முடிவுகட்டப்பெற்றன. ஏனையவை அறியப் பெறாதன. நான்கு கல்வெட்டுக்கள் குலசேகர பாண்டியனுடைய ஆட்சி 10, 13 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தவை. இவற்றை இங்ஙனம் வரையறுத்து எழுதியவர் ஸெவல் பாதிரியார்.

இத்தலத்தில் சுந்தரபாண்டியன் மண்டபம் (இது கருப்பக் கிருகவாயிலில் உள்ளது) ஆறுகால் மண்டபம் (-144 of 1903), லக்ஷ்மி மண்டபம்(-142 of 1903), முதலிய மண்டபங்களும் , விசுவநாதர் கோயில்(-146 of 1903), சுப்பிரமணிய சுவாமி கோயில் (-152 of 1903) முதலியனவும் கோயிலுக்குள் இருக்கின்றன. பிரான்மலைக் கிராமத்தில் ஷ்ரீ சொக்கநாதர் கோயில் உள்ளது(-154 of 1903). இறைவன் மங்கைநாதர்(-138 of 1903) எனவும், கொடுங்குன்றமுடைய நாயனார்(-140 of1903) எனவும், நல்லமங்கைபாகர் எனவும், (-154 of 1903) குன்றாண்ட நாயனார் எனவும்,( -202 of 1924) குறிப்பிடப்பெறுகின்றார்.

பாண்டிய மன்னர்களில் சுந்தரபாண்டியன் I,சுந்தரபாண்டி யன்II, பராக்ரம பாண்டியன், குலசேகர பாண்டியன், வீரபாண்டியன் இவர்கள் விளக்குக்காகப் பசுக்களும், பொன்னும், சேவார்த்திகட்கு உணவிற்கும், விளக்குத் தண்டு செய்தற்குமாகப் பொன்னும் நிலமும் அளித்த செய்திகளை அறிவிக்கின்றன; பல கல்வெட்டுக்கள். கி.பி. 1251 - 1264க்குள் ஆண்ட கோனேரின்மைகண்டான் காலத்தில் துவராபதி வேளார், பிரபாவபுரந்தரன் ஆகிய இருவரும் நிலம் அளித்தனர். இம்மடி நரசிங்கராயர் காலத்தில் பிரான்மலைச்சீமை என்றும், திருமலை நாட்டுப்பகுதியான பிரான்மலை என்றும் குறிக்கப் பெறுகின்றது. திப்பரசரையன் நன்மைக்காகக் கேரளசிங்க வளநாட்டு இப்புலி நாயகர் நிலம் அளித்தார். இங்கு ஒரு வியாபாரிகள் சங்கம் இருந்ததாகவும் கல்வெட்டுக் கூறுகிறது(-154 of 1903).

1924 ஆம் ஆண்டில் படியெடுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் 16. அவற்றுள் ஐந்து, பாண்டியர்கள் காலத்தன. ஏனையவை விசயநகர அரசர்கள் காலத்தன. சடாவர்மன் வீரபாண்டியன் ஆட்சி 9ஆம் ஆண்டில், திருஞானம் பெற்ற பிள்ளையார் படிமத்தை எழுந்தருள் வித்துக் கேரளசிங்க வளநாட்டுக் குலசேகரன் பட்டினத்து அருவியூ ரானான கொடுங்குன்றமுடையான் ஒருவன் பூசைக்கு நிபந்தமும் அளித்தான்(-208 of 1934). குலசேகர பாண்டியன் காலத்தில் கீழ்வேம்புநாட்டு இராசவல்லி புரத்துக் கொன்றைசேர் முடியானும், திருநெல்வேலி யுடையானும் விளக்குக்கு ஆடுகள் அளித்தனர் (-194 of 1924) . கண்ணமங்கலமான திருவெங்கா உடைய நல்லூர்; அமோகமங்கலமான முதலி நாயக நல்லூர் உடையான் இருவரும் அர்த்தயாம பூசைக்கு நிலம் அளித் தனர். அந்தப் பூசைக்குத் தாழ்வுசெய்யாதான் சந்தியென்று பெயர் (-202 of 1924). காரைக்குடியான் ஒருவன் மங்கைநாயகர் வசந்த உற்சவத்திற்காக வாணராய நல்லூரை இறையிலி செய்து அளித்தான் (-203 of 1924). விஜயநகர அரசர்கள் வேதபாராயணத்திற்காகவும்(-207 of 1924), உற்சவத்திற்காகவும் (-196 of 1924), கானூர் முதலிய இடங்களை அளித்தனர்
மாவை உடையார் பேரவை

முனைவர் மு.பொன்னவைகோ

முனைவர் மு. பொன்னவைக்கோ இவர் தென்னாற்காடு மாவட்டத்தில் செங்கமேடு என்னும் சிற்றூரில் பெருநிழக்கிழார் முருகேச உடையார் அவர்களுக்கும், அருள்நிற...