Udayar, Moopanar, Nainar

Parkavakulam ( Udayar, Moopanar, Nainar)

Monday, May 7, 2018

செண்பகக்கொல்லை உடையார்...

செண்பக கொல்லை உடையார்........

திருவண்ணாமலை மாவட்டத்து திருக்கோயிலூர் எனும் ஊர் சங்கத்தமிழ் நூல்களில் திருக்கோவலூர் எனக் குறிக்கப்பெறுகின்றது. கோவல் வீரட்டம் எனச்  சைவர்கள் போற்றும் கீழூர் வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலும், உலகளந்தபெருமாள் நின்றருளும் வைணவர்கள் போற்றும் விண்ணகரமும் இவ்வூருக்கு இரு  கண்களாக விளங்குகின்றன.

தென்பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருக்கோவலூரின் மேற்குப்பகுதி தற்போது நகரமாக விளங்குகின்றது. கீழூர் ஆரவாரமின்றி அமைதியாகக்  காணப்பெறுகின்றது. சோழர் கல்வெட்டுகள் கீழூரை, கீழைச்சேரி என்றும், மேலூரை மேலைச்சேரி என்றும் குறிப்பிடுகின்றன. கீழூர் மதுராந்தக சதுர்வேதி மங்கலம்  என்ற பெயரிலும், மேலூர் நகரம் திருக்கோவலூர் என்றும் அழைக்கப் பெற்றதைச் சோழர் சாசனங்கள் எடுத்துரைக்கின்றன.

மலாடு அல்லது மிலாடு என்ற பண்டைய நாட்டுப் பகுதியில் குறுக்கைக் கூற்றத்தில் திருக்கோவலூர் திகழ்ந்தது. மிலாடு என்ற நாட்டின் அரசர்களாக  மலையமான் அரசர்கள் திகழ்ந்தனர். அவர்களைச் சேதிராயர் என்றும், மிலாடுடையார் என்றும் கல்வெட்டுகளும், இலக்கியங்களும் குறிக்கின்றன. அறுபத்து மூன்று  நாயன்மார்களில் ஒருவர் திருக்கோவலூர் மலையமான் குலத்தில் உதித்தவர் ஆவார். சிவனடியார் வேடத்தில் வஞ்சக எண்ணத்துடன் வந்த முத்தநாதன் தன்னை  வாள் கொண்டு குத்திய போதிலும் அவனைக் காப்பதற்காக தன் மெய்க்காவலனிடம் ‘‘தத்தா நமரே காண்’’ என்று கூறிய மெய்ப்பொருள் நாயனார்,  மலையமான் மன்னரே.

சிவபெருமானின் வீரச்செயல்கள் எட்டெனத் தொன்னூல்கள் உரைக்கின்றன. அவ்வீரச் செயல்கள் நிகழ்ந்த தலங்களை ‘அட்ட வீரட்டம்’ எனக் குறிப்பர். சலந்தரன்  எனும் அரக்கனின் ஆணவத்தை அடக்க சக்கரம் ஒன்றைத் தோற்றுவித்து அவன் உடல் பிளந்து பின்பு அவனுக்கு அருளிய வீரச்செயல் நிகழ்ந்த தலமே  திருக்கோவல் வீரட்டமாகும். அதனால்தான் கீழூர் சிவாலயத்தை வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலென கல்வெட்டுகளும் இலக்கியங்களும் குறிக்கின்றன.  பெண்ணையாறு இத்திருக்கோயிலின் மதிலினை முத்தமிட்டவாறு ஓடுகின்றது.

கோயிலை ஒட்டியுள்ள நதித்துறையின் எதிரே ஒரு பெரிய பாறையும் அதன்மேல் கபிலேஸ்வரம் எனும் சிறு கோயிலும் உள்ளன. அப்பாறையினை ராஜராஜ  சோழனின் கல்வெட்டு கபிலக்கல் என்று குறிப்பிடுகிறது. அழகிய ராஜகோபுரம், திருமதில், இரு திருச்சுற்றுகள், மண்டபங்கள், பரிவாராலயங்கள், பெரிய நாச்சியார்  எனும் பிரஹன் நாயகி அம்மன் கோயில் ஆகியவற்றுடன் வீரட்டானேஸ்வரரின் கருவறை அழகிய கற்றளியாகக் காட்சி நல்குகிறது. சிவாலயத்துக்குரிய எல்லா  செப்புத் திருமேனிகளும் இங்கு காணப்பெறுவதோடு சலந்தர வதம் செய்த மூர்த்தியின் திருவுருவும் இங்கு இடம்பெற்றிருக்கிறது.

பல்லவப் பேரரசர்கள் காலந்தொட்டு திகழும் இப்பழைய ஆலயத்தில் மூன்றாம் நந்திவர்ம பல்லவனின் கல்வெட்டுகள் காணப்பெற்றாலும் தற்போது காணப்பெறும்  கற்றளி முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் புதுப்பிக்கப் பெற்றதாகும். அதனால்தான் இவ்வாலயத்தில் ராஜராஜ சோழன் காலந்தொட்டு வெட்டுவிக்கப்பெற்ற  கல்வெட்டுச் சாசனங்கள் மிகுந்த அளவில் காணப்பெறுகின்றன. இக்கோயிலுக்குரிய தலபுராணம் திருக்கோயிலூர் புராணம் என்ற பெயரில் உள்ளது.

கி.பி. 16ம் நூற்றாண்டில் வடமொழியில் திகழ்ந்த திருக்கோயிலூர் புராணத்தை தமிழில் பாடல்கள் வடிவில் மொழி பெயர்த்தனர். பின்னாளில் அச்சுவடி நூலில் பல  சிதைவுகள் ஏற்பட்டு வேட்டவலம் ஜமீன்தாரிடம் அழியும் நிலையில் இருந்ததை தஞ்சாவூர் மாவட்டம் செண்பகக் கொல்லை செளந்தரராஜ உடையார் என்ற  தமிழறிஞர் செப்பம் செய்து இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பதிப்பித்து அந்நூலைக் காப்பாற்றினார். பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் போன்ற  பேரறிஞர்கள் அந்நூலுக்குச் சாற்றுக்கவி அளித்து போற்றியுள்ளனர்.

திருக்கோயிலூர் புராணத்தில் இராம இலக்குவர் பூஜித்த லிங்கமே திருக்கோயிலூர் வீரட்டானேஸ்வரர் என்று குறிக்கப் பெற்றுள்ளது. இச்சிவாலயத்திலுள்ள  கணபதிப் பெருமான் அவ்வையாருக்கு துணை புரிந்ததும் கூறப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவபெருமான் அனுப்பிய யானை மீது ஏறி கயிலை செல்ல  முற்பட்ட போது, அவ்வையார் கணபதியிடம் வேண்ட அவர் தன் துதிக்கையால் அவ்வைப் பாட்டியைப் பற்றி சுந்தரர் கயிலை செல்வதற்கு முன்பாகவே இவரை  கயிலையில் விட்டார் என்றும், இந்திரன் தன் சாபம் நீங்க பூஜை செய்த தலம் இதுவென்றும் கூறப்பெற்றுள்ளது.

திருக்கோயிலூர் அரசரின் புதல்வர்களாகப் பிறந்த மலையமான், நந்தமான் என்ற இருவர் மரபுதான் கோயிலூர் அரச மரபு என்றும் இப்புராணம் விளங்குகின்றது.  அதில் கூறப் பெறுகின்ற ஒரு முக்கிய புராணக் கதை, கோயிலுக்கு அருகே பெண்ணையாற்றில் காணப்பெறும் கபிலர் பாறை பற்றியதாகும். விண்ணக கங்கையை  மண்ணகத்துக்குத் தவ வலிமையால் கொண்டு வந்த பகீரதனின் முன்னோர்களான சகர சாகரர் பத்தாயிரம் பேரையும் பாதாள லோகத்தில் தன் ஆஸ்ரமத்தில்  இருந்த கபில முனிவர் இந்திரனின் சூழ்ச்சி காரணமாக தவறாக தன் சாபத்தால் எரித்தாராம்.

பின்பு உண்மை தெரியவே தன் தோஷம் நீங்க திருக்கோவலூர் வந்து பெண்ணையாற்று பாறை மீது லிங்கஸ்தாபனம் செய்து பூஜித்து கடுந்தவம் இயற்ற அவர்  சாப விமோசனம் ெபற்றதாகத் திருக்கோயிலூர் புராணம் கூறுகின்றது. மேலே குறிப்பிட்ட புராணக் கதைகளின் காட்சிகளைக் கோவலூர் வீரட்டானேஸ்வரர்  கோபுரவிதானத்தில், தமிழில் எழுதப் பெற்ற எழுத்துக் குறிப்புகளுடன் 200 ஆண்டுகளுக்கு முன்பு வண்ண ஓவியங்களாகத் தீட்டியிருந்தனர்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு அவ்வோவியக் காட்சிகளை இக்கட்டுரையாசிரியர் படமெடுத்து பாதுகாத்து வைத்துள்ளார். ஆனால் பின்னாளில் நிகழ்ந்த  திருப்பணிகளின் போது அவை முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டன. அவ்வோவியக் காட்சிகளில் ஒளவையார் கணபதியை பூஜிப்பது, கயிலைக்கு செல்வது, இராம  இலக்குவர் பூஜிப்பது, கபில முனிவர் பாறை மீது லிங்கபூஜை செய்வது ஆகிய காட்சிகள் உள்ளன. கபிலமுனி கபிலேஸ்வரம் எனும் பாறை மீதுள்ள கோயிலில்  வழிபடும் ஓவியக்காட்சி மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

வீரட்டேஸ்வரர் கோயிலில் உள்ள இராஜராஜனின் கல்வெட்டு சாசனப் பாடல் முழுவதையும் நாம் காணும் போது சங்ககால கபிலர் எனும் தமிழ்ப் புலவரின்  வரலாறு அப்பாறையுடன் (கபிலக்கல்) எவ்வாறு பின்னிப் பிணைந்திருந்தது என்பது பற்றியும், பின்னாளில் ஏற்பட்ட இருண்ட இடைக்காலம் ஒன்றால் பழைய  வரலாற்றை மறந்து கபிலமுனியின் புராணம் இங்கு இடம் பெற்றது என்பதையும் நாம் அறியலாம்.

திருக்கோவலூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஏறத்தாழ எண்பது கல்வெட்டுச் சாசனங்களை இந்திய கல்வெட்டுத் துறையினர் படி எடுத்து பாதுகாத்து  வைத்துள்ளனர். அவற்றுள் ஒரு கல்ெவட்டே இராஜராஜசோழனின் அவையில் அறங்களை எடுத்துக் கூறும் அதிகாரியான கம்பன் மணியனான மஹிமாலய  மூவேந்த வேளான் செய்த அறச்செயல்களை விவரிப்பதாகும்.

முழுவதும் பாடல்களாகவே அமைந்த இந்த கல்வெட்டில் திருக்கோவலூரின் பெருமை, வீரட்டேஸ்வரர் ஆலயத்தின் இருப்பிடம், இராஜராஜனின் வெற்றிகள்,  அவன் தாய் வானவன் மாதேவி திருக்கோவலூர் மலையமானின் புதல்வி என்பது, அத்தேவி சுந்தரசோழரின் உடல் எரியூட்டப் பெற்றபோது தீப்பாய்ந்து  தெய்வமானவர் என்பது, கபிலக்கல்லின் சிறப்பு, மஹிமாலய மூவேந்த வேளாண் செய்த அறக்கொடைகள், அவன் தங்கத்தால் இலிங்கம் செய்து பொற்பூக்களால்  இத்தலத்தில் அர்ச்சனை புரிந்தது ஆகிய அனைத்தும் அழகு தமிழில்
எடுத்துரைக்கப் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment

முனைவர் மு.பொன்னவைகோ

முனைவர் மு. பொன்னவைக்கோ இவர் தென்னாற்காடு மாவட்டத்தில் செங்கமேடு என்னும் சிற்றூரில் பெருநிழக்கிழார் முருகேச உடையார் அவர்களுக்கும், அருள்நிற...