Udayar, Moopanar, Nainar

Parkavakulam ( Udayar, Moopanar, Nainar)

Sunday, May 6, 2018

#மலையமான்
 தலைவன் கூற்று;

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று : இரவுக்குறி வந்து நீங்குகின்ற தலைமகன், தன்னெஞ்சிற்கு வரைவுடைமை வேட்பக் (திருமணத்தில் விருப்பம் தோன்றக்) கூறியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் இரவில் சந்தித்தார்கள். அதன் பின்னர் தலைவன் தன் இல்லத்திற்குச் செல்கிறான். தலைவி தன்னோடு இருக்கும் பொழுது மனம் ஒன்றி, அன்புடையவளாகப் பழகுவதையும், அவள் தன் சுற்றத்தாரோடு இருக்கும்பொழுது தன் களவொழுக்கத்தை மறைத்து அவர்கள் விருப்பத்திற்கேற்ப நடப்பதையும் நினைத்து, வியந்து, அவளை விரைவில் மணந்துகொள்ள வேண்டும் என்று தனக்குத் தானே கூறிக்கொள்கிறான்.

இரண்டறி கள்விநங் காத லோளே
முரண்கொள் துப்பிற் செவ்வேல் மலையன்
முள்ளூர்க் கான நாற வந்து
நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள்
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச்
சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி
அமரா முகத்த ளாகித்
தமரோ ரன்னள் வைகறை யானே.

 கொண்டு கூட்டு: நம் காதலோள் இரண்டு அறி கள்வி!  முரண்கொள் துப்பின் செவ்வேல் மலையன் முள்ளூர்க் கானம் நாற வந்து, நள்ளென் கங்குல் நம் ஓரன்னள்; வைகறையான், கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்து, சாந்துளர் நறும் கதுப்பு எண்ணெய் நீவி, அமரா முகத்தளாகித் தமர் ஓரன்னள்!

 சிறப்புக் குறிப்பு: தலைவி தலைவனோடு மனம் ஒன்றிப் பழகுகிறாள். இரவிலே அவனோடு கூடி மகிழ்கிறாள். அவர்கள் இரவில் சந்திக்கும் பொழுது, அவன் அவளுக்குப் பலவகையான மலர்களைச் சூட்டி அவள் அழகைக் கண்டு மகிழ்கிறான். அவளும் அவன் விருப்பத்துக்கு இணங்கி நடந்துகொள்கிறாள். ஒருநாள், காலைவேளையில் தலைவன் தலைவி வீட்டுக்கு விருந்தினனாகச் சென்றான். அவள் தலையில், அவன் முதல் நாள் இரவு சூட்டிய மலர்களைக் காணவில்லை. அவள் அந்த மலர்களை உதிர்த்துவிட்டு, நீராடித் தலையில் எண்ணெயைத்  தடவி வாரியிருந்தாள். அவள் தன் சுற்றத்தாரோடு மனம் ஒன்றிப் பழகினாள். அவனோடு காதலியாக இரவில்  உறவாடியவள் இப்பொழுது அவனைத் தெரியாதவள் போல் நடந்துகொள்கிறாள். இவ்வாறு, இருவேறு விதமான நடத்தையை உடைய கள்வியாக அவள் இருப்பாது அவனுக்கு மிகுந்த வியப்பாக இருக்கிறது.
தலைவி இருவேறு விதமாக நடந்துகொள்ளும் ஆற்றல் உடையவளாக இருந்தாலும், அவளால் நெடுங்காலம் களவொழுக்கத்தை மறைக்கமுடியாது. ஆகவே, விரைவில் அவளைத் திருமணம் செய்துகொள்வதுதான் சிறந்தது என்று தலைவன் நினைக்கிறான்.

No comments:

Post a Comment

முனைவர் மு.பொன்னவைகோ

முனைவர் மு. பொன்னவைக்கோ இவர் தென்னாற்காடு மாவட்டத்தில் செங்கமேடு என்னும் சிற்றூரில் பெருநிழக்கிழார் முருகேச உடையார் அவர்களுக்கும், அருள்நிற...