
Udayar, Moopanar, Nainar
Monday, May 7, 2018
முனைவர் மு.பொன்னவைகோ

டி.எஸ்.சாமிநாத உடையார்
மன்னை தேசிய மேநிலைப் பள்ளி பற்றிய ஆவண பட முயற்சி பாராட்டுக்குரியது.
அதற்காக மன்னையின் மைந்தர்கள் அமைப்புக்கு வாழ்த்துக்கள் . அன்றய காலகட்டத்தில் மேல தஞ்சை மாவட்டத்தின் மிக பெரிய செல்வந்தர் குடும்பம் என பெயர் பெற்ற தண்ணீர்குண்ணம் உடையார் குடும்பத்தை சேர்ந்த T .S .சிங்காரவேலு உடையார் இப்பள்ளியை தொடங்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்.மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி முதலில் கீழராஜ வீதியில் இருந்த பள்ளி நிறுவனர் சிங்காரவேலு உடையார் அவர்களின் இல்லத்தில் தான் முதலில் தொடங்கப்பட்டது. பின்னர் தற்போது உள்ள இடத்திற்கு மாறியது.
1952ஆம் ஆண்டு மறைந்த பள்ளி நிறுவனர் சிங்காரவேலு உடையார் மகனும் மன்னார்குடி நகருக்கு பல வழிகளில் பெருமை சேர்த்த ஐயா T .S .சுவாமிநாத உடையார் இப்பள்ளியின் செயலர் மற்றும் தாளாளராக பொறுப்பேற்றார் . அது முதல், இப்பள்ளி வளர்ச்சியின் உச்சத்தை எட்ட தொடங்கியது. 1957 ஆம் ஆண்டு V.சீனிவாசனை பள்ளியின் தலைமை ஆசிரியராக நியமித்தார். நல்ல திறமையான ஆசிரியர்களை கண்டறிந்து வேலை வாய்ப்பு அளித்து இப்பள்ளியில் நல்ல தரமான கல்வி கிடைக்க வழி வகை செய்தது சுவாமிநாத உடையார் ஐயா தான் என்றால் அது மிகையாகாது. ஐயா T.S.சுவாமிநாத உடையாரின் சகோதரர் கடுகு சார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட T .B .சிவசாமி அவர்கள் உடற்கல்வி ஆசிரியராக இருந்த போதுதான் இப்பள்ளி விளையாட்டு துறையில் மாநில அளவில் பல சாதனைகளை படைத்தது.
42 ஆண்டுகள் தாளாளராக இருந்த சுவாமிநாத உடையார் ஐயா காலத்தில் பள்ளியின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வளர்ச்சி திட்டங்களும் நடந்தது, அவர் காலத்தில் தான் 1978ல் உயர் நிலை பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. மன்னார்குடி மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த பல மாணவர்களின் கல்விக்கு வித்திட்டவர் உடையார் ஐயா அவர்கள். தேசிய மேனிலைப் பள்ளியையும் . ஐயா சுவாமிநாத உடையாரையும் பிரித்து பார்க்க இயலாது, இப்பள்ளியை பற்றி பேசும் போதும், எழுதும் போதும் சுவாமிநாத உடையரும் சேர்ந்தே பேசப்படுவார் .
ஐயா T .S .சுவாமிநாத உடையார் அவர்கள் மன்னை நகரின் நகராட்சி தலைவராகவும் , சட்டமன்ற உறுப்பினராக 1957 முதல் 1971 வரை மூன்று முறை இருந்துள்ளார். அவரின் அரசியல் தொடர்பின் காரணமாக அப்போதைய தமிழக முதல்வர்கள் திரு.காமராஜ், திரு.பக்தவச்சலம் , திரு.அறிஞர் அண்ணா மற்றும் திரு.கலைஞர் உள்ளிட்டோர் இப்பள்ளிக்கு வருகை தந்து பெருமை சேர்த்தனர்.
செண்பகக்கொல்லை உடையார்...
திருவண்ணாமலை மாவட்டத்து திருக்கோயிலூர் எனும் ஊர் சங்கத்தமிழ் நூல்களில் திருக்கோவலூர் எனக் குறிக்கப்பெறுகின்றது. கோவல் வீரட்டம் எனச் சைவர்கள் போற்றும் கீழூர் வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலும், உலகளந்தபெருமாள் நின்றருளும் வைணவர்கள் போற்றும் விண்ணகரமும் இவ்வூருக்கு இரு கண்களாக விளங்குகின்றன.
தென்பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருக்கோவலூரின் மேற்குப்பகுதி தற்போது நகரமாக விளங்குகின்றது. கீழூர் ஆரவாரமின்றி அமைதியாகக் காணப்பெறுகின்றது. சோழர் கல்வெட்டுகள் கீழூரை, கீழைச்சேரி என்றும், மேலூரை மேலைச்சேரி என்றும் குறிப்பிடுகின்றன. கீழூர் மதுராந்தக சதுர்வேதி மங்கலம் என்ற பெயரிலும், மேலூர் நகரம் திருக்கோவலூர் என்றும் அழைக்கப் பெற்றதைச் சோழர் சாசனங்கள் எடுத்துரைக்கின்றன.
மலாடு அல்லது மிலாடு என்ற பண்டைய நாட்டுப் பகுதியில் குறுக்கைக் கூற்றத்தில் திருக்கோவலூர் திகழ்ந்தது. மிலாடு என்ற நாட்டின் அரசர்களாக மலையமான் அரசர்கள் திகழ்ந்தனர். அவர்களைச் சேதிராயர் என்றும், மிலாடுடையார் என்றும் கல்வெட்டுகளும், இலக்கியங்களும் குறிக்கின்றன. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் திருக்கோவலூர் மலையமான் குலத்தில் உதித்தவர் ஆவார். சிவனடியார் வேடத்தில் வஞ்சக எண்ணத்துடன் வந்த முத்தநாதன் தன்னை வாள் கொண்டு குத்திய போதிலும் அவனைக் காப்பதற்காக தன் மெய்க்காவலனிடம் ‘‘தத்தா நமரே காண்’’ என்று கூறிய மெய்ப்பொருள் நாயனார், மலையமான் மன்னரே.
சிவபெருமானின் வீரச்செயல்கள் எட்டெனத் தொன்னூல்கள் உரைக்கின்றன. அவ்வீரச் செயல்கள் நிகழ்ந்த தலங்களை ‘அட்ட வீரட்டம்’ எனக் குறிப்பர். சலந்தரன் எனும் அரக்கனின் ஆணவத்தை அடக்க சக்கரம் ஒன்றைத் தோற்றுவித்து அவன் உடல் பிளந்து பின்பு அவனுக்கு அருளிய வீரச்செயல் நிகழ்ந்த தலமே திருக்கோவல் வீரட்டமாகும். அதனால்தான் கீழூர் சிவாலயத்தை வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலென கல்வெட்டுகளும் இலக்கியங்களும் குறிக்கின்றன. பெண்ணையாறு இத்திருக்கோயிலின் மதிலினை முத்தமிட்டவாறு ஓடுகின்றது.
கோயிலை ஒட்டியுள்ள நதித்துறையின் எதிரே ஒரு பெரிய பாறையும் அதன்மேல் கபிலேஸ்வரம் எனும் சிறு கோயிலும் உள்ளன. அப்பாறையினை ராஜராஜ சோழனின் கல்வெட்டு கபிலக்கல் என்று குறிப்பிடுகிறது. அழகிய ராஜகோபுரம், திருமதில், இரு திருச்சுற்றுகள், மண்டபங்கள், பரிவாராலயங்கள், பெரிய நாச்சியார் எனும் பிரஹன் நாயகி அம்மன் கோயில் ஆகியவற்றுடன் வீரட்டானேஸ்வரரின் கருவறை அழகிய கற்றளியாகக் காட்சி நல்குகிறது. சிவாலயத்துக்குரிய எல்லா செப்புத் திருமேனிகளும் இங்கு காணப்பெறுவதோடு சலந்தர வதம் செய்த மூர்த்தியின் திருவுருவும் இங்கு இடம்பெற்றிருக்கிறது.
பல்லவப் பேரரசர்கள் காலந்தொட்டு திகழும் இப்பழைய ஆலயத்தில் மூன்றாம் நந்திவர்ம பல்லவனின் கல்வெட்டுகள் காணப்பெற்றாலும் தற்போது காணப்பெறும் கற்றளி முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் புதுப்பிக்கப் பெற்றதாகும். அதனால்தான் இவ்வாலயத்தில் ராஜராஜ சோழன் காலந்தொட்டு வெட்டுவிக்கப்பெற்ற கல்வெட்டுச் சாசனங்கள் மிகுந்த அளவில் காணப்பெறுகின்றன. இக்கோயிலுக்குரிய தலபுராணம் திருக்கோயிலூர் புராணம் என்ற பெயரில் உள்ளது.
கி.பி. 16ம் நூற்றாண்டில் வடமொழியில் திகழ்ந்த திருக்கோயிலூர் புராணத்தை தமிழில் பாடல்கள் வடிவில் மொழி பெயர்த்தனர். பின்னாளில் அச்சுவடி நூலில் பல சிதைவுகள் ஏற்பட்டு வேட்டவலம் ஜமீன்தாரிடம் அழியும் நிலையில் இருந்ததை தஞ்சாவூர் மாவட்டம் செண்பகக் கொல்லை செளந்தரராஜ உடையார் என்ற தமிழறிஞர் செப்பம் செய்து இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பதிப்பித்து அந்நூலைக் காப்பாற்றினார். பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் போன்ற பேரறிஞர்கள் அந்நூலுக்குச் சாற்றுக்கவி அளித்து போற்றியுள்ளனர்.
திருக்கோயிலூர் புராணத்தில் இராம இலக்குவர் பூஜித்த லிங்கமே திருக்கோயிலூர் வீரட்டானேஸ்வரர் என்று குறிக்கப் பெற்றுள்ளது. இச்சிவாலயத்திலுள்ள கணபதிப் பெருமான் அவ்வையாருக்கு துணை புரிந்ததும் கூறப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவபெருமான் அனுப்பிய யானை மீது ஏறி கயிலை செல்ல முற்பட்ட போது, அவ்வையார் கணபதியிடம் வேண்ட அவர் தன் துதிக்கையால் அவ்வைப் பாட்டியைப் பற்றி சுந்தரர் கயிலை செல்வதற்கு முன்பாகவே இவரை கயிலையில் விட்டார் என்றும், இந்திரன் தன் சாபம் நீங்க பூஜை செய்த தலம் இதுவென்றும் கூறப்பெற்றுள்ளது.
திருக்கோயிலூர் அரசரின் புதல்வர்களாகப் பிறந்த மலையமான், நந்தமான் என்ற இருவர் மரபுதான் கோயிலூர் அரச மரபு என்றும் இப்புராணம் விளங்குகின்றது. அதில் கூறப் பெறுகின்ற ஒரு முக்கிய புராணக் கதை, கோயிலுக்கு அருகே பெண்ணையாற்றில் காணப்பெறும் கபிலர் பாறை பற்றியதாகும். விண்ணக கங்கையை மண்ணகத்துக்குத் தவ வலிமையால் கொண்டு வந்த பகீரதனின் முன்னோர்களான சகர சாகரர் பத்தாயிரம் பேரையும் பாதாள லோகத்தில் தன் ஆஸ்ரமத்தில் இருந்த கபில முனிவர் இந்திரனின் சூழ்ச்சி காரணமாக தவறாக தன் சாபத்தால் எரித்தாராம்.
பின்பு உண்மை தெரியவே தன் தோஷம் நீங்க திருக்கோவலூர் வந்து பெண்ணையாற்று பாறை மீது லிங்கஸ்தாபனம் செய்து பூஜித்து கடுந்தவம் இயற்ற அவர் சாப விமோசனம் ெபற்றதாகத் திருக்கோயிலூர் புராணம் கூறுகின்றது. மேலே குறிப்பிட்ட புராணக் கதைகளின் காட்சிகளைக் கோவலூர் வீரட்டானேஸ்வரர் கோபுரவிதானத்தில், தமிழில் எழுதப் பெற்ற எழுத்துக் குறிப்புகளுடன் 200 ஆண்டுகளுக்கு முன்பு வண்ண ஓவியங்களாகத் தீட்டியிருந்தனர்.
முப்பதாண்டுகளுக்கு முன்பு அவ்வோவியக் காட்சிகளை இக்கட்டுரையாசிரியர் படமெடுத்து பாதுகாத்து வைத்துள்ளார். ஆனால் பின்னாளில் நிகழ்ந்த திருப்பணிகளின் போது அவை முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டன. அவ்வோவியக் காட்சிகளில் ஒளவையார் கணபதியை பூஜிப்பது, கயிலைக்கு செல்வது, இராம இலக்குவர் பூஜிப்பது, கபில முனிவர் பாறை மீது லிங்கபூஜை செய்வது ஆகிய காட்சிகள் உள்ளன. கபிலமுனி கபிலேஸ்வரம் எனும் பாறை மீதுள்ள கோயிலில் வழிபடும் ஓவியக்காட்சி மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
வீரட்டேஸ்வரர் கோயிலில் உள்ள இராஜராஜனின் கல்வெட்டு சாசனப் பாடல் முழுவதையும் நாம் காணும் போது சங்ககால கபிலர் எனும் தமிழ்ப் புலவரின் வரலாறு அப்பாறையுடன் (கபிலக்கல்) எவ்வாறு பின்னிப் பிணைந்திருந்தது என்பது பற்றியும், பின்னாளில் ஏற்பட்ட இருண்ட இடைக்காலம் ஒன்றால் பழைய வரலாற்றை மறந்து கபிலமுனியின் புராணம் இங்கு இடம் பெற்றது என்பதையும் நாம் அறியலாம்.
திருக்கோவலூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஏறத்தாழ எண்பது கல்வெட்டுச் சாசனங்களை இந்திய கல்வெட்டுத் துறையினர் படி எடுத்து பாதுகாத்து வைத்துள்ளனர். அவற்றுள் ஒரு கல்ெவட்டே இராஜராஜசோழனின் அவையில் அறங்களை எடுத்துக் கூறும் அதிகாரியான கம்பன் மணியனான மஹிமாலய மூவேந்த வேளான் செய்த அறச்செயல்களை விவரிப்பதாகும்.
முழுவதும் பாடல்களாகவே அமைந்த இந்த கல்வெட்டில் திருக்கோவலூரின் பெருமை, வீரட்டேஸ்வரர் ஆலயத்தின் இருப்பிடம், இராஜராஜனின் வெற்றிகள், அவன் தாய் வானவன் மாதேவி திருக்கோவலூர் மலையமானின் புதல்வி என்பது, அத்தேவி சுந்தரசோழரின் உடல் எரியூட்டப் பெற்றபோது தீப்பாய்ந்து தெய்வமானவர் என்பது, கபிலக்கல்லின் சிறப்பு, மஹிமாலய மூவேந்த வேளாண் செய்த அறக்கொடைகள், அவன் தங்கத்தால் இலிங்கம் செய்து பொற்பூக்களால் இத்தலத்தில் அர்ச்சனை புரிந்தது ஆகிய அனைத்தும் அழகு தமிழில்
எடுத்துரைக்கப் பெற்றுள்ளன.
பிருகு மகரிஷி....
உலகம் தோன்றிய கால
த்தில் படைக்கும் கடவுளான பிரம்மதேவரால் உருக்கப்பட்டவர் பிருகு முனிவர். "பிருகு என்னும் சொல்லுக்கு, "கடுமையான தவசக்தியால் பாவங்களைப் பொசுக்குபவர் என்று பொருள். பஞ்சபூதங்களில் அக்கினியுடன் பிருகு மகரிஷி பிறந்ததாக வேதங்கள் கூறுகின்றன.
பிருகு மகரிஷி கியாதி என்ற பெண்மணியை மணந்து கொண்டார். இந்த தம்பதிக்கு மகாலட்சுமியே மகளாகப் பிறந்தாள். பின் விஷ்ணுவை மணந்து கொண்டாள். இதனால் உலகத்தைக் காக்கும் ஸ்ரீவிஷ்ணுவுக்கு ""மாமனார் என்ற பெருமை பெற்றவர் இவர். பிருகுவின் பெயரால் தான் லட்சுமிக்கு "பார்கவி என்ற பெயர் ஏற்பட்டது.
மகாபாரதத்தில் பிருகு மகரிஷிக்கும் பரத்வாஜ முனிவருக்கும் நடந்த வாக்குவாதம் மிகவும் சிறப்பானது. இதற்கு"" பிருகு பரத்வாஜ சம்வாதம் என்று பெயர். இப்பகுதி தத்துவக் கருத்துக்களை எடுத்துச் சொல்லும் பகுதியாக அமைந்துள்ளது. கடவுளைப் பற்றி சொல்வதில் இவர் தனிப்பெயர் பெற்றவராக இருக்கிறார்.
சூதபவுராணிகர் என்ற முனிவர் புராணக் கதைகளை உலகிற்கு வழங்கினார். இந்தக் கதைகளைக் கேட்டு உலகிற்கு தந்தவர் பிருகு வம்சத்தில் பிறந்த சவுனகர் என்பவர் ஆவார். இவர் இல்லாவிட்டால் புராணக்கதைகளே நமக்கு கிடைத்திருக்காது. என்றும் பதினாறு வயது என்ற பெருமைக்கு உரிய மார்க்கண்டேய மகரிஷியும் பிருகு வம்சத்தவர் தான். விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் பரசுராமரும் இவரது வம்சத்தில் தான் அவதரித்தார். பிருகு எனப்படும் பார்கவ வம்சத்தில் அவதரித்ததால் பரசுராமருக்கு "பார்கவ ராமன் என்ற பெயரும் உண்டு. விருத்திராசுரனைக் கொல்ல தன் முதுகெலும்பினையே இந்திரனிடம் கொடுத்து, தன்னையே மாய்த்துக் கொண்ட ததீசி முனிவரும் பிருகுவம்சத்தில் தோன்றியவரே. ஜனமேஜயர் செய்த சர்ப்பயாகத்தை நடத்தி வைத்த உதங்கமுனிவர் இவ்வம்சத்தவர் தான். இப்படி புராணங்களில் இடம்பெற்ற எத்தனையோ மகரிஷிகள் பிருகுவம்சத்தில் அவதரித்துள்ளனர்
ஒளி விளக்கு ஏற்றிய உடையார்...
தஞ்சை மாவட்டம், நன்னிலம் வட்டம் செல்வபுரம் என்னும் சிற்றுரில் 1888 சூன் திங்கள் முதல் நாள் பன்னீர்செல்வம் பிறந்தார். இவர் பார்க்கவ குலம் உடையார் வகுப்பைச் சேர்ந்தவர் . பள்ளிப் படிப்பைத் தஞ்சை மாவட்டத்தில் முடித்துத் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.
உயர்நிலைப் பள்ளித் தேர்வை முடித்தவுடன் பொன்னுப் பாப்பம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
panneerselvam 400கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் , இலண்டன் சென்று "கிரேஸ்கின்' சட்டக் கல்லூரியில் பார் – அட்–லா பட்டத்தைப் பெற்றார். 1912 இல் தாயகம் திரும்பினார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில வழக்கறிஞராகப் பதிவு செய்து, தஞ்சை நகரில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார்.
1916 இல் தொடங்கிய நீதிக்கட்சியின் செயல்பாடுகளை ஊன்று கவனித்து வந்த பன்னீர்செல்வம் அதன் கொள்கைகள் திட்டங்கள் ஆகியவற்றால் பெரிதும் கவரப்பட்டார். நீதிக்கட்சியின் மாநாடுகளில் பங்கு பெறத் தொடங்கினர்.
தஞ்சை நகரில் செயல்பட்ட பொதுநல அமைப்புகளில் பங்கு பெற்றுப் பொதுத் தொண்டுகள் ஆற்றினார். அரசு வழக்கறிஞராகச் சில ஆண்டுகள் பணிபுரிந்தார்.
1918 இல் தஞ்சை நகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றினார். 1924 முதல் 1930 வரை தஞ்சை மாவட்ட ஆட்சிக் கழகத்தின் தலைவராகப் பல அருட்பணிகளை நிறைவேற்றினார்.
1916 இல் தொடங்கிய நீதிக்கட்சி 1920 இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. அதேபோல் 1929 இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. நீதிக்கட்சியின் வெற்றிக்குப் பன்னீர்செல்வம் துணைநின்றார்.
காங்கிரசுக் கட்சியில் பிராமணரல்லாதவருக்கு எந்தப் பயனும் இல்லை என்பதை அறிந்து தந்தை பெரியார் 1925 ஆம் ஆண்டு காங்கிரசுக் கட்சியைவிட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட முடிவெடுத்தார். சர் பன்னீர்செல்வம் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து பெரியாருடன் செயல்பட்டார்.
நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் தனித்தனியே செயல்பட்டாலும், தந்தை பெரியார் நீதிக்கட்சிக்கு துணையாக இருந்தார்.
1929 ஆம் ஆண்டில் செங்கற்பட்டில் நடைபெற்ற முதலாவது மாகாணச் சுயமரியாதை மாநாட்டில் இளைஞர் அரங்கத்திற்குப் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி உரையாற்றினார்.
1930 இல் லண்டனில் நடைபெற்ற முதல் வட்ட மேஜை மாநாட்டில் நீதிக்கட்சியின் சார்பில் கலந்து கொண்டு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மற்றும் தனித்தொகுதி கேட்டு உரையாற்றினார். 1931 இல் நடைபெற்ற இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
1930 முதல் சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்தில் தீர்மானங்கள் மீது அவர் ஆற்றும் உரை அனைவரையும் ஈர்க்கும். சில காலம் அமைச்சராகவும் செயல்பட்டார். 1937 இல் காங்கிரசுக் கட்சி ஆட்சியின் போது சட்டமன்ற எதிர் கட்சித் தலைவராகச் செயல்பட்டார்.
1938 இல் திருச்சியில் நடைபெற்ற "தமிழர் மாநாட்டில்' தலைமை தாங்கி அரியதொரு உரை நிகழ்த்தினார். இந்த மாநாட்டில்தான் "தமிழ்நாடு தனியாகப் பிரிக்கப்படவேண்டும்' என்கிற தீர்மானம் முதன் முதலில் நிறைவேற்றப்பட்டது.
1939 இல் நடைபெற்ற இரண்டாம் உலகப்பேõரின் போது ஆங்கிலேயே அரசின் போர்க்கால அமைச்சரவைக்கு ஆலோசகராகப் பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். இதற்கு நீதிக்கட்சி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு போருக்கும் ஆதரவு அளித்தது.
1940 சனவரி திங்களில் பன்னீர்செல்வம் இந்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 25 இல் சொந்த ஊரான செல்வபுரத்திலிருந்து புறப்பட்டுச் சென்னை வந்தடைந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பம்பாய்சென்று அங்கிருந்து விமானத்தில் கராச்சியிலிருந்து வைஸ்ராய் அனுப்பி வைத்த விமானம் மூலம் மார்ச்சு திங்கள் முதல் நாள் காலை 5.00 மணியளவில் “ஹணபால்'' விமானம் மூலம் லண்டன் புறப்பட்டார். அவருடன் 4 இராணுவ அதிகாரிகளும் 3 அரசு உயர் அதிகாரிகளும் இருந்தனர். அவர் சென்ற விமானம் மாலை 3.00 மணியளவில் "சார்ஜா' அடையவேண்டும். ஆனால், இயந்திரக் கோளறினாலோ அல்லது ஜெர்மன் படையின் தாக்குதலாலோ "ஓமன்' கடலில் அவ்விமானம் விழுந்து மூழ்கியது. அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.
சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் தமிழ்வேள் உமா மகேசுவரனுடன் இணைந்து தஞ்சை மாவட்டத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். இவர்கள் இருவரும் “தஞ்சை இரட்டையர்'' என்ற பெயரில் நீதிக்கட்சிக்காகப் பாடுபட்டார்.
தஞ்சையை ஆண்ட அரசர் பரம்பரையினரால் அமைக்கப்பட்ட திருவையாறு கல்லூரியில் "சமஸ்கிருதம்' மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. அதனை மாற்றி அங்குத் தமிழும் பயிற்றுவிக்கப்படும் நிலையைப் பன்னீர்செல்வம் உருவாக்கினார். மேலும் "சமஸ்கிருதக் கல்லூரி' என்று இருந்த பெயரை “அரசர் கல்லூரி' என்றும் பெயர் மாற்றினார்.
தஞ்சை மாவட்டத்தில் அரசர்கள் கட்டிய சத்திரங்களில் உயர்சாதி பிராமணர்களுக்கு மட்டும்தான் உணவு வழங்கப்படும் என்ற நிலையை மாற்றி எல்லா வகுப்பினருக்கும் உணவு கிடைக்கும்படிச் செய்தவர் நமது பன்னீர்செல்வமே.
தஞ்சை ஆதி திராவிடர் மாணவர்களின் நலன்காக்க அவர்களுக்கு "உணவு விடுதி' ஒன்றை ஏற்படுத்தி அந்த வகுப்பு மாணவர்கள் கல்வி உயர்வுக்குப் பாடுபட்டார். தஞ்சை மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவராகவும் அவர் சில காலம் பணியாற்றினார்.
சர்.ஏ.டி. பன்னீர்செல்வத்தின் மறைவு, தமிழர்களுக்கும் நீதிகட்சியினர்களுக்கும் பெரியார் அவர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்தது
மலையமான் திருமுடிக்காரி
இன்றைய விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி இரு நாடுகளாக இருந்துள்ளது. அவற்றுள் ஒன்று, மலையமான் நாடு என்ற ‘மலாடு’ என்னும் பெயர் கொண்டிருந்த ‘பெண்ணையம் படப்பை நாடு’; இன்னொன்று ஓவியர்மா நாடு என்ற ‘ஓய்மாநாடு’ ஆகும்.
மலையமான் நாடு :
மலாடு, இன்றைய கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், சங்கராபுரம், விழுப்புரம், உளுந்தூர் பேட்டை பகுதிகளையும் கல்வராயன் மலைப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்திருக்கிறது எனலாம். ஓய்மாநாடு கடற்கரைப்பகுதியை அடுத்த புதுச்சேரி, திண்டிவனம், செஞ்சி ஆகிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்டிருந்திருக்கிறது என்று கூறலாம்*.
மலையமான் நாட்டின் தலைநகராக திருக்கோவலூர் இருந்திருக்கிறது. இப்போது, திருக்கோயிலூர் என்றும் திருக்கோவிலூர் என்றும் அழைக்கப்படும் இவ் ஊர், கழக இலக்கியங்களிலும், தேவாரத் திருப்பதிகங்களிலும் திருக்கோவலூர், கோவல் நகர், கோவல் என்று குறிக்கப் பட்டுள்ளதைக் காண்கிறோம். மலையமான் நாட்டில் பல ஊர்கள் சிறப்புடையனவாக இருந்தன. கோவலூர்த் தென்பெண்ணை யாற்றின் தென்மேற்கில் இருந்ததாகக் கருதப்படும் பாதுகாப்பான முள்ளூர்க்குத் தலைவர் மலையமான் திருமுடிக்காரியாவார்.
மலையமான் திருமுடிக்காரி :
மலாட்டை ஆண்ட சிறந்த மன்னர்களுள் மலையமான் திருமுடிக்காரி முகன்மையான அரசர் ஆவார். இவர் மலையமான் திருமுடிக்காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் காரி என்றும் அழைக்கப் படுபவர் ஆவார். காரி, சிறந்த வீரராகவும் உயர்ந்த வள்ளலாகவும் விளங்கியவர். இவ் அரசரைப் பற்றிய செய்திகளைக் கூறும் பல பாடல்களைக் கழக (சங்க) இலக்கியங்களில் காண்கிறோம்.
சான்றுகள் :
மலையமான் நாட்டை அடுத்துள்ள வேணாட்டு(வேளிர் நாடு)ப் பகுதியில் ஆனிரை கோடலிலும் மீட்டலிலும் ஈடுபட்டு இறந்த வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் மிகுதியாக கிடைத்துள்ளன. அவற்றில் சில நடுகற்கள், கோவல் (கோவலூர்) மறவர்கள் போரில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்குச் சான்றாக விளங்குகின்றன*
கோவல் பண்டைக்காலத்தில் பெருவழியில் அமைந்திருந்திருக்கிறது; வணிகத்திலும் சிறந்து விளங்கி இருந்திருக்கிறது. இப்பகுதியில் அகழ்வில் இப்போது கிடைக்கும் பலவகையான காசுகளில் கழகக்கால சேரர் காசுகளும், பாண்டியர் காசுகளும், சோழர் காலத்தைச் சேர்ந்த முத்திரை குத்தப்பட்ட காசுகளும், குசானர், சாதவாகனர்காலக் காசுகளும் கிடைக்கின்றன. கோவலூருக்கு அருகிலுள்ள கரையப்பட்டு என்ற இடத்தில் இருநூறு (200) உரோமானியத் தங்கக் காசுகள் கிடைத்துள்ளதிலிருந்து கோவல், உரோமானியர்களோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தமை தெரிகிறது. இங்குக் கிடைத்துள்ள மலையமான் காசுகளைப் பற்றிய ஆய்வு நூல்களும் வெளிவந்துள்ளன*.
பாடியோர் :
மலையமான் திருமுடிக்காரியின் சிறப்புகளைப் போற்றிப் பல புலவர்கள் பாடியுள்ளனர். அவர்களுள், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், கபிலர், குடவாயிற் கீரத்தனார், பரணர், கல்லாடனார், வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார், மாறோக்கத்து நப்பசலையார், பெருஞ்சித்திரனார் ஆகியோர் முதன்மையர் ஆவர்.
காரியும் கொல்லியும் :
மலையமான் நாடான மலாட்டில் கொடுங்கால் என்ற நகரம் சிறந்து விளங்கியிருந்திருக்கிறது. திருமுடிக்காரி, கொல்லிமலையை ஆண்ட மன்னன் ஓரியைப் போரில் கொன்று, கொல்லிக் கூற்றத்தைச் சேரனுக்குத் தந்ததை அறிய முடிகின்றது.
வளம் மிக்க மலாட்டுப் பகுதியினைக் கைப்பற்றவும், ஓரியைத் திருமுடிக்காரி போரில் கொன்றதற்குப் பழி தீர்க்கவும் அதிகமான் நெடுமான் அஞ்சி கோவலூரை முற்றுகையிட்டு வெற்றி கொண்டார். மலையமான் திருமுடிக்காரி கொடைத் திறன் மிக்கவர்; கடையெழு வள்ளல்களுள் ஒருவர். இவருக்குப் பின், இவர் மகன் சோழிய ஏனாதி திருக்கண்ணன் ஆட்சிக்கு வந்தார். இவர் காலத்தில் மலாடு சோழர்களின் ஆட்சிக்கு உடபட்டிருந்தது. புறநானூற்றுப் பாடல், சோழ மன்னன் முள்ளூர் மலையில் படையுடன் தங்கியிருந்ததைக் கூறுவதைக் கொண்டு, வரலாற்றுப் புதின எழுத்தாளர் ‘கல்கி’ அவருடைய ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தில் சில கதை நிகழ்வுகளை எழுதியுள்ளார்.
காரியும் கபிலரும் கல்வெட்டும் :
கபிலருக்கு மலையமான் திருமுடிக்காரியுடன் நற்றொடர்பு இருந்தது. பறம்புமலை மன்னனான வள்ளல் பாரி மூவேந்தருடனான போரில் இறந்த பிறகு, பாரி மளரிர்க்கு மணமுடிக்கும் பொறுப்பைப் புலவர் கபிலர் ஏற்கிறார். ஆனால், மூவேந்தர்க்கும் அஞ்சி, பாரிமகளிரைச் சிற்றரசர் யாரும் மணம் புரிந்து கொள்ள முன்வரவில்லை.
திருக்கோவலூர்த் தெய்வீகன் பாரிமகளிரை மணந்ததாக மரபுவழிக் கதைகள் கூறப்படுவதால், கபிலர் காலத்தவரான மலையமான் திருமுடிக்காரி இதற்கு துணையிருந்திருப்பதாக எண்ணலாம். பாரி மகளிரை ஒளவையாரோடு தொடர்பு படுத்திச் சொல்வதற்கும், திருமுடிக்காரியே பாரிமகளிரை மணந்ததாகச் சொல்வதற்கும் அடிப்படைச் சான்றெதுவும் இல்லை என்க. திருக்கோவலூரில் உள்ள கீழையூர் வீரட்டானேசுவரர் கோயிலில் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட முதலாம் இராசராசனின் கல்வெட்டு உள்ளது. அதில், கபிலர் அங்கு வந்து மலையமானிடம் பாரியின் பெண்களை அடைக்கலப் படுத்திவிட்டு, அங்கு (கீழையூர் பெண்ணையாற்றுத் துறைக் கருகில் ஆற்றிலுள்ள) கல்லொன்றில் தீ வளர்த்து உயிர் நீத்தார் என்ற செய்தி கீழ்க்காணுமாறு குறிக்கப்பட்டுள்ளது :
தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன்
மூரிவண் தடக்கை பாரிதன டைக்கலப்
பெண்ணை மலையற் குதவிப் பெண்ணை
அலைபுனல் அழுவத்து அந்தரிட்சம்செல
மினல்புகும் விசும்பின் வீடு பேறெண்ணி
கனல்புகும் கபிலக் கல்லது*.
இன்றும் அங்குப் பெண்ணையாற்றில் ஒரு சிறு குன்றும், குன்றின்மேல் ஏறிச் செல்ல படிக்கட்டுகளும் குன்றின் மேலே, கோயில் போன்ற அமைப்பும் அக் கோயிலைச் சுற்றிவர வழியும் உள்ளதைக் காணலாம். இதனை ஊர் மக்கள் ‘கபிலர் குன்று’ என்றும் ‘கபிலக் கல்’ என்றும் கூறுகின்றனர். இக் குன்றை இடைச்சி ஒருவரின் கதையோடு தொடர்பு படுத்தி, ‘இடைச்சிக் குன்று’ என்றும் அழைக்கின்றனர்.
Sunday, May 6, 2018
கொடுங்குன்றம் (பிரான்மலை)
அருள்மிகு குயிலமுத நாயகி உடனுறை கொடுங்குன்றீசர்
மரம்: பலா மரம், உறங்காப் புளி
குளம்: தேனாடி
பதிகம்: வானிற்பொலி -1 -14 திருஞானசம்பந்தர்
பாண்டியநாட்டுத்தலம் இது பிரான்மலை என இக்காலத்து வழங்குகின்றது. மேலும் மதுரை, மேலூர் சிங்கம்புணரியிலிருந்து பேருந்துகளில் செல்லலாம். திருக்கோயில் அடிவாரத்தில் உள்ளது.
மகோதர மகரிஷியும், நாகராஜனும் வழிபட்ட தலம். அருணகிரிநாதர் திருப்புகழ் பெற்ற சுப்பிரமணியத் தலமாகும். மலை மேல் வைரவர் சந்நிதி மிக விசேஷம். சுவாமி சந்நிதியில் திருக் கல்யாணக்கோலம் சிறப்பானது. தேவசபா மண்டபம் என்ற ஒரு மண்டபம் இருக்கின்றது.
இறைவன்பெயர் கொடுங்குன்றீசர். தேவியார் குயிலமுத நாயகி. தேவாரம் `தனிற் பொலிமொழியாள்`` எனக் குறிப்பிடுகின் றது. இத்தலம் குன்றக்குடி திவண்ணாமலை ஆதீன அருளாட்சியி லுள்ளது.
கல்வெட்டு:
இத்தலத்தைப் பற்றியனவாக இருபத்தொரு கல்வெட்டுக்கள் அரசியலாரால் கி.பி. 1903 ஆம் ஆண்டில் படியெடுக்கப் பெற்றுள்ளன. அவற்றுள் எட்டுக் கல்வெட்டுகள் ஆராய்ந்து முடிவுகட்டப்பெற்றன. ஏனையவை அறியப் பெறாதன. நான்கு கல்வெட்டுக்கள் குலசேகர பாண்டியனுடைய ஆட்சி 10, 13 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தவை. இவற்றை இங்ஙனம் வரையறுத்து எழுதியவர் ஸெவல் பாதிரியார்.
இத்தலத்தில் சுந்தரபாண்டியன் மண்டபம் (இது கருப்பக் கிருகவாயிலில் உள்ளது) ஆறுகால் மண்டபம் (-144 of 1903), லக்ஷ்மி மண்டபம்(-142 of 1903), முதலிய மண்டபங்களும் , விசுவநாதர் கோயில்(-146 of 1903), சுப்பிரமணிய சுவாமி கோயில் (-152 of 1903) முதலியனவும் கோயிலுக்குள் இருக்கின்றன. பிரான்மலைக் கிராமத்தில் ஷ்ரீ சொக்கநாதர் கோயில் உள்ளது(-154 of 1903). இறைவன் மங்கைநாதர்(-138 of 1903) எனவும், கொடுங்குன்றமுடைய நாயனார்(-140 of1903) எனவும், நல்லமங்கைபாகர் எனவும், (-154 of 1903) குன்றாண்ட நாயனார் எனவும்,( -202 of 1924) குறிப்பிடப்பெறுகின்றார்.
பாண்டிய மன்னர்களில் சுந்தரபாண்டியன் I,சுந்தரபாண்டி யன்II, பராக்ரம பாண்டியன், குலசேகர பாண்டியன், வீரபாண்டியன் இவர்கள் விளக்குக்காகப் பசுக்களும், பொன்னும், சேவார்த்திகட்கு உணவிற்கும், விளக்குத் தண்டு செய்தற்குமாகப் பொன்னும் நிலமும் அளித்த செய்திகளை அறிவிக்கின்றன; பல கல்வெட்டுக்கள். கி.பி. 1251 - 1264க்குள் ஆண்ட கோனேரின்மைகண்டான் காலத்தில் துவராபதி வேளார், பிரபாவபுரந்தரன் ஆகிய இருவரும் நிலம் அளித்தனர். இம்மடி நரசிங்கராயர் காலத்தில் பிரான்மலைச்சீமை என்றும், திருமலை நாட்டுப்பகுதியான பிரான்மலை என்றும் குறிக்கப் பெறுகின்றது. திப்பரசரையன் நன்மைக்காகக் கேரளசிங்க வளநாட்டு இப்புலி நாயகர் நிலம் அளித்தார். இங்கு ஒரு வியாபாரிகள் சங்கம் இருந்ததாகவும் கல்வெட்டுக் கூறுகிறது(-154 of 1903).
1924 ஆம் ஆண்டில் படியெடுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் 16. அவற்றுள் ஐந்து, பாண்டியர்கள் காலத்தன. ஏனையவை விசயநகர அரசர்கள் காலத்தன. சடாவர்மன் வீரபாண்டியன் ஆட்சி 9ஆம் ஆண்டில், திருஞானம் பெற்ற பிள்ளையார் படிமத்தை எழுந்தருள் வித்துக் கேரளசிங்க வளநாட்டுக் குலசேகரன் பட்டினத்து அருவியூ ரானான கொடுங்குன்றமுடையான் ஒருவன் பூசைக்கு நிபந்தமும் அளித்தான்(-208 of 1934). குலசேகர பாண்டியன் காலத்தில் கீழ்வேம்புநாட்டு இராசவல்லி புரத்துக் கொன்றைசேர் முடியானும், திருநெல்வேலி யுடையானும் விளக்குக்கு ஆடுகள் அளித்தனர் (-194 of 1924) . கண்ணமங்கலமான திருவெங்கா உடைய நல்லூர்; அமோகமங்கலமான முதலி நாயக நல்லூர் உடையான் இருவரும் அர்த்தயாம பூசைக்கு நிலம் அளித் தனர். அந்தப் பூசைக்குத் தாழ்வுசெய்யாதான் சந்தியென்று பெயர் (-202 of 1924). காரைக்குடியான் ஒருவன் மங்கைநாயகர் வசந்த உற்சவத்திற்காக வாணராய நல்லூரை இறையிலி செய்து அளித்தான் (-203 of 1924). விஜயநகர அரசர்கள் வேதபாராயணத்திற்காகவும்(-207 of 1924), உற்சவத்திற்காகவும் (-196 of 1924), கானூர் முதலிய இடங்களை அளித்தனர்
மாவை உடையார் பேரவை
தஞ்சையை தலைமையிடமாகக் கொண்டு அரசாண்டு வந்த மராட்டிய மன்னன் சரபோஜி ஒரு முறை படை பரிவாரங்களுடன் காசிக்கு யாத்திரை சென்றார். இத்தனை பரிவாரங்களுடன் வந்திருக்கும் இந்த மன்னர் எந்த தேசத்து ராஜா என்று காசி மக்கள் வியந்து கேட்டனர் அதற்கு தஞ்சை ஆண்டு கொண்டிருக்கும் சரபோஜி மகாராஜா என்று கூட வந்தவர்கள் கூறினர். வட நாட்டில் உள்ளவர்களுக்கு தஞ்சை என்றதும் புரியவில்லை அது எங்கு இருக்கிறது என்று வினாவினர் .அதற்கு கூட வந்தவர்கள் தஞ்சை பெரிய கோயிலையும் காவிரி கரையையும் அடையாளமாக கூறினர் .காவிரி கரையை என்றதுமே காசி மக்கள் மூப்பனார் தேசத்து ராஜாவா முன்னதுமே சொல்ல வேண்டியது தானே என்று கூறினர்.
தந்சையிலிருந்து 23 கிமீ தொலைவில் ஐயாரப்பர் ஆலயம் அமைந்து உள்ள திருவையாற்றில் இருந்து 10 கிமீ தொலைவிலும் வீர மாங்குடி கிராமம் அமைந்துள்ளது . வாய் பொய்பினும் தான் பொய்யாமல் ஒரு காலத்தில் பாய்ந்த காவிரியின் வடக்கிலும் , கொள்ளிட யாற்றின் தெற்கிலும் இடைப்பட்டு நிற்கிறது இந்த கிராமம்.
தமிழக வரலாற்றில், குறிப்பாகச் சோழர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக விளங்குவது இங்குள்ள 'அனந்தீசுவரர் கோயிலில்' உள்ள கல்வெட்டுக்களாகும். இவையே 'உடையார்குடிக் கல்வெட்டுக்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன. இக்கோயிலில்தான் இராசராசனாரின் பெரிய பாட்டியான 'செம்பியன் மாதேவி'க்குத் திருமணம் நடந்தது. அவர் இக்கோயிலுக்குத் தன்பெயரால் நந்தாவிளக்கு அறக்கொடையாக அளித்துள்ளார். உத்தமசோழன் காலத்தில், அடிகள் 'பழுவேட்டரையன் கண்டன் சுந்தரசோழன்' என்ற பழுவூர் அரசன், தன் தம்பி 'கண்டன் சத்துருபயங்கரன்' என்பானின் ஆன்ம அமைதிக்காக நந்தாவிளக்கு வைக்க மானியம் வழங்கியுள்ளான்.
கோயில் முழுக்கக் கல்வெட்டுக்கள், அவையாவும் பல்வேறு வரலாற்றுத் தகவல்களைத் தெரிவிப்பவையாக உள்ளன. கோயில் சுற்றுச்சுவரிலுள்ள தெய்வச்சிலைகள் பெரும்பாலும் சிதைந்துள்ளன / சிதைக்கப்பட்டுள்ளன. முற்காலச் சோழர் காலத்தில் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெரிய நந்தி, பிற்காலப் படையெடுப்புக்கள், சூறையாடல்களால் உடைத்தெறியப்பட்டது. ஆயினும், நந்தியின் தலை மட்டும் மிஞ்சியது. இந்தத் தலையை தென்புற திருச்சுற்று சுவரில் பதித்து வைத்துள்ளனர்.
இங்குதான், இராசராசனாரின் அண்ணனான 'ஆதித்த கரிகாலனைக்' கொன்றவர்களுக்கான தண்டனை விவரம் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்விவரம் கோயில் கருவறையின் மேற்குப் புறத்தில் உள்ளது. அஃது,
"ஸ்வஸ்தி ஸ்ரீ கோராஜகேஸரிவர்ம்மர்க்கு யாண்டு 2வது வடகரை ப்ரமதேயம் ஸ்ரீ வீரநாரயணச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறிப் பெருமக்களுக்கு சக்ரவர்த்தி ஸ்ரீ முகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகாலச் சோழனைக் கொன்று த்ரோஹிகளான சோம(ன்)…(இவன்) றம்பி ரவிதாஸன பஞ்சவன் பரஹ்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரனான இருமுடி சோழ ப்ரஹ்மதிராஜ்னும் இவகள் தம்பிமாரும் இவகள் மக்களிதும் இவர் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள்…) றமத்தம்
பேரப்பன்மாரிதும் இவகள் மக்களிதும் இவகளுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிதும் தாயோடப் பிறந்த மாமன்மாரிதும் இவகள் உடப்பிறந்த பெண்களை வேட்டாரினவும் இவகள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முறி)யும் நம்மாணைக் குரியவாறு
கொட்டையூர் ப்ரஹ்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்ரசேகர பட்டனையும் பெரத் தந்தோம் தாங்களும் இவகள் கண்காணியோடும் இவகள் சொன்னவாறு நம்மாணைக்குரியவாறு குடியொடு குடிபேறும் விலைக்கு விற்றுத் தாலத்திடுக இவை குறு(காடி)கிழான் எழுத்தென்று இப்பரிசு வர"
என்பதாகும். இக்கல்வெட்டு, இராசராசனின் இரண்டாம் ஆட்சியண்டிலேயே பொறிக்கப்பட்டதாகும். கல்வெட்டு, பல்வேறு இடங்களில் 'சிதைக்கப்பட்டு'ள்ளன. இவை வரலாற்றை மறைக்கும் அக்கால / இக்கால முயற்சியாகவும் இருக்கலாம்.
கட்டாயம் அனைவரும் சென்று காணவேண்டிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் இது.
14ம் நூற்றாண்டிற்கு பிறகு விவசாய தொழிலை மேற்கொண்டனர் ஆதலால் வேளீர் மரபில் உள்ள எங்களை வெள்ளாளர் பிரிவில் உள்ள அனைவரும் உரிமை கொள்ள முற்படுகின்றனர் உங்கள் கூற்று தவறானது .வரலாற்றை நன்கு படியுங்கள் என் நட்பு சாதிகளே.
மலாடர்=மலையர்=சேதியர்=மழவர்.
பார்க்கவ குல மக்கள் வேளாண்மையிலும் ஈடுபடுவதால் வெள்ளாளர் போன்ற ஒரு ஜாதியாக அறியாதவர்களால் கருதப்படுகின்றனர்.ஆனாலும் உண்மையில் சத்திரிய சமூகமான இவர்கள் எவ்வாறு எப்போது நில உடைமையாளர்களாக ஆனார்கள் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த விளக்கம் இதோசேர்ந்த மக்களான இவர்கள்...
"
் அதாவது பனிரெண்டாம் நூற்றாண்டு காலத்தில் நில உடைமை சமூகமாகி உடையார்,நாட்டார்,நாடாள்வார்,கிழார்(மூப்பனார்),
என்ற அந்தஸ்துகளில் இருந்து கால மாற்றத்தின் போது உண்டாகும் பல்வேறு அரசியல் காரணங்களால் பதினெட்டாம் நூற்றாண்டு முதலாய் பார்க்கவ குலத்தாரில் பலரும் முழுமையான விவசாயிகளாக மாறினார்கள்.
ஆனாலும் என்றைக்கும் தம்மை வெள்ளாளர் என்று கூறிக் கொண்டதும் கிடையாது. வெள்ளாளர்களோடு மண உறவு கொண்டதும் கிடையாது.
சித்திர மேழி பெரியநாட்டார் என்ற அமைப்பில் நாட்டார் பதவியில் இருந்த இவர்கள் வெள்ளாளர்களில் இருந்து தம்மை வேறுபடுத்திக்காட்டவே பதினைந்தாம் நூற்றாண்டிலேயே தம்மை பார்க்கவ குல சத்திரியர் என்று அழைத்துக் கொண்டனர்.
ஏனெனில் மன்னராட்சிக் காலந்தொட்டே வெள்ளாளரிடம் வரிவசூல் செய்யும் கடமை கொண்ட பண்டாரத்தார், பண்டரையர் போன்ற பதவிகளைக் கொண்டவர்கள் பார்க்கவ குல சமூகத்தவர்.பார்க்கவ வம்சத்து மலையமான் மக்கள் அனைவரும் மலையர் மலாடர் என்று வழங்கப்படும் ஒரு மரபைச் சேர்ந்தவர்கள்.சேதியர் உடையார் மூப்பனார் என்றும் பட்டப் பெயரால் அழைக்கப்படுபவர்கள். மலையமான்கள் பார்க்கவ குலத்தார் எனக்கூறும் கல்வெட்டு ஆதாரம்.
மலையமான்கள் தங்கள் இனம் என்று பல்வேறு இனத்தினரும் உரிமை கோரும் போது மலையமான் மன்னர்களே தங்களை பார்க்கவ குலத்தவர் எனக்கூறும் ஆதாரங்களில் முதன்மையானது...........
திருக்கோவிலூர் திருமால் கோவிலில் உள்ள கல்வெட்டு செய்தி:
"'மிலாடான
ஜனநாத வள நாட்டுக் குறுக்கைக் கூற்றத்துப்
பிரமதேயம் திருக்கோவலூரான ஸ்ரீ மதுராந்தகச்
சதுர்வேதி மங்கலத்து திரு விடைக் கழி ஆழ்வார்
ஸ்ரீ விமானம் முன்பு இட்டிகை படையாய்ப்
பலகை பிளந்தமை கண்டு பார்க்கவ வம்சத்து
மிலாடுடையார் இரண கேசரி இராமரான நரசிங்கவர்மர் கோயிலை இழிச்சி கற்கொண்டு ஸ்ரீ
விமானமும் மண்டபமும் எடுப்பித்து முத்துப் பந்தலுங்
கொடுத்து முன்பு கல்வெட்டுப் படியுள்ள நிபந்தங்கள்
எல்லாம் ஸ்ரீ விமானத்தே கல்லுவெட்டு
வித்தார் நரசிங்க வர்ம ரென்று அபிஷேகம் பண்ணி
முடிகவித்து மிலாடு இரண்டாயிரம் பூமியும் ஆண்ட
மிலாடுடையார் நரசிங்க வர்மர்.
சந்திராதித்த வல் எரிக்க வைத்தா திரு நந்தா விளக்கு
இரண்டு இவைக்கு விளக்கெரிக்க கொடுத்த
சாவா மூவாயப் பெரும்பசு அறுபத்து நாலு."
திருக்கோவிலூரிலுள்ள திருமால் கோவிலில் திரு விடைக்கழி ஆழ்வார் சன்னதி ஸ்ரீ விமானம் பழுது பட்டதைக்கண்டு...
பார்க்கவ வம்சத்தைச் சேர்ந்த மிலாடுடையார் இரண கேசரி இராமரான நரசிங்க வர்மர் செங்கலால் கட்டப்பட்ட கோயிலை புதிப்பித்து கருங்கற்களால் ஸ்ரீ விமானமும் மண்டபமும் எடுப்பித்து,ஐந்து ஸ்தூபியும் எடுத்து,உட்பிரகாரத்தையும் ஒருமண்டபத்தையும் கட்டி,முத்துக்கள் பதித்த விதானத்தையும் கொடுத்து,சூரிய சந்திரர் உள்ளவரை விளக்கெரிக்க இரண்டு நந்தாவிளக்குகளும் கொடுத்து (விளக்கு நெய்க்காக)அறுபத்து நான்கு பெரிய பசுக்களும் கொடுத்து இத்தகவலை கல்வெட்டில் வெட்டுவிக்கவும் செய்துள்ளார்,
நரசிங்க வர்மர் என்ற பட்டாபிஷேக பெயர் கொண்ட மிலாடு இரண்டாயிரம் பூமியும் ஆண்டவரான பார்க்கவ வம்சத்தை சேர்ந்த மிலாடு உடையார் நரசிங்க வர்மர்.
கல்வெட்டு கூறும் உண்மைகள் என்ற நூலில் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் மேற்கண்ட கல்வெட்டைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இன்னொரு காலம் அறியப்படாத கல்வெட்டில் பார்க்கவ வம்சத்து மிலாடுடையார் நரசிங்க வர்மர் பொன்னாலான ஸ்தூபி ஒன்றைக் கொடுத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.
மலையமான் மன்னர்களில் ஒருவரான வாணகோவரையன்என்பவர் இந்த கோவிலில் நந்தா விளக்கெரிக்க வேண்டி நிலங்களை தானமளித்துள்ளார் என்று கோவில் வெளிச்சுற்று வடக்குபுறச் சுவரில் ராஜராஜ சோழன் கால கல்வெட்டு கூறுகிறது.
அதே பகுதியில் மலையமான் பெரிய உடையான் என்ற மன்னர் கிராம சபையிடமிருந்து வரி விலக்கு பெற்ற நிலத்தினை வாங்கி இறைவனுக்கு தினசரி பூஜை,நைவேத்தியம் செய்விக்க தேவதானமாக வழங்கியுள்ளார் என்றொரு செய்தியும் காணப்படுகிறது.
அதே கோவிலில் வேணு கோபாலசுவாமி சன்னதிக்கு செல்லும் படிக்கட்டுகளில் உடையார் பாளையத்தை ஆண்ட உடையார்கள் சில கட்டிடங்களை எழுப்பியதாக கல்வெட்டு செய்தி காணப்படுகிறது.
சேலம் கல்வெட்டு:
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூர் தான் தோன்றியவார் கோயில் முன் புதைந்து கிடந்த தூண் கல்வெட்டு ஒன்று கல்வெட்டு ஆய்வாளர் புலவர் துரைசாமி அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது,அதில்
பார்க்கவ கோத்திரத்து மிலாடுடையார் செம்பியன் மிலாடுடையார் என்ற மன்னர் பற்றிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்னார்க்காடு மாவட்டம் எலவானச்சூர் சிவன் கோவில் கல்வெட்டு,மற்றும் திருக்கோவில் வீரட்டானேஸ்வரர் கோவில் கல்வெட்டு.
முதலாம் ராஜேந்திர சோழரது ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மேற்கண்ட இடங்களில் உள்ள கல்வெட்டுகளில்
பார்க்கவ கோத்திரத்து யாதவ வீமனை உத்தம சோழ மிலாடுடையான்.
என்ற மன்னன் இருந்ததான குறிப்புகள் காணப்படுகிறது.புரியாதவர் புரிந்து கொள்ள வேண்டும்.
தெய்வீக நரசிங்க உடையான் வம்சத்தில் வந்த பார்கவ குல உடையார்கள் மட்டுமே மலையமான் நத்தமான் சுருதிமான் என்ற தனித்தனி வம்ச பெயர்கள் உடையவர்கள். சுருதிமான் என்ற தனித்தனி வம்சப்பெயர் உடையவர்கள். சுருதிமான் மூப்பனார்களும் உடையார் என்ற பட்டம் கொண்டோராயிருந்திருப்பினும் பின்னாளில் காணியாட்சி முறையில் சிறந்து விளங்காமையாள் தஞ்சை திருச்சி போன்ற பகுதிகளில் வழக்கில் உள்ள ஜமீன்தார் முறைப்படியும் குல முதல்வர் என்ற பொருளிலும் மூப்பனார் என்ற பொதுவான பட்டம் கொண்டு மட்டுமே அழைக்கப்படுகின்றனர். அவர்கள் தம்மை பார்க்கவ குல மூப்பனார் என்றோ , சுருதிமான் மூப்பனார் என்றோ சொல்ல வேண்டும். முக்கியமாக பார்கவர்களில் உடையார்கள் மலையமான் உடையார் நத்தமான் உடையார் என்று தெளிவாக கூற வேண்டும்.இதுவே நம் சந்ததியினர்க்கு தெளிவாக குறிப்பிடுவதே நம் கடமையாகும்
கவிஞர் அ.மருதகாசி உடையாரின் நினை வேந்தல் 29.11.1989 தமிழ் அறிஞர்.
மரபிலக்கியச் சாயல்களையும், தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமிதங்களையும் திரைப்பாடல்களில் வெளிப்படுத்த தவறாத கவிஞர் மருதகாசி ‘கள்ளமலர்ச் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே கன்னிமனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே’ என்று காதலின் ஆரம்பத்தையும் ‘எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே’ என்று காதலின் மடிவையும் எழுதிக் காட்டியவர்தான் கவிஞர் மருதகாசி.
பிறப்பு:
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மேலக்குடிகாடு என்னும் கிராமத்தில், 1920-ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி பிறந்தார்.
தந்தை: அய்யம்பெருமாள் உடையார்
தாய்: மிளகாயி அம்மாள்:
கல்வி:
உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி கற்றார்.
திருமணம்:
1940 இல் தனக்கோடியை மணந்தார். இவர்களுக்கு 6 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
நாடகப் பணி:
அருணாசல கவிராயரின் படைப்புகளின் தாக்கத்தால் சிறுவயதிலேயே கவிதைகள் எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். கல்லூரிப் படிப்புகளுக்குப் பிறகு குடந்தையில் தேவி நாடக சபையின் நாடகங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தார். மு.கருணாநிதி எழுதிய மந்திரகுமாரி போன்ற நாடகங்களுக்கும் பாடல் எழுதினார். கவிஞர் கா. மு. ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். இக்குழுவில் இசையமைத்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்கும் பாடல்கள் எழுதிவந்தார். பாபநாசம் சிவனின் சகோதரரும், பாடலாசிரியருமான இராஜகோபால அய்யரிடம் உதவியாளராக இருந்தார்.
திரைப்படப்பாடல்கள்:
தலைசிறந்த இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் "மாடர்ன் தியேட்டர்ஸ்' படத்துக்காக ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்தபோது அவர் முன்னால் திருச்சி லோகநாதன், மருதகாசியின் நாடகப் பாடலைப் பாடிக் காட்டினார். அருகிலிருந்த இயக்குநர் டி.ஆர்.சுந்தரம், மருதகாசியின் பாடலின் உட்கருத்தால் கவரப்பட்டு உடனே அவரை அழைத்து முதல் வாய்ப்பை வழங்கினார்.
1949-இல் வெளிவந்த "மாயாவதி' படத்தின் மூலம் திரைப்பாடலாசிரியராக அறிமுகமானார் மருதகாசி. ""பெண் எனும் மாயப் பேயாம்... பொய் மாதரை என் மனம் நாடுமோ'' (மாயாவதி) என்று தொடங்கும் பாடல்தான் மருதகாசியின் முதல் பாடல். அந்தப் படத்தில் தொடங்கி சுமார் இருநூற்று ஐம்பது படங்களுக்கு மேல் பாடல்களை எழுதிக்குவித்தார். இவர் எழுதிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை நாலாயிரத்தையும் தாண்டும்.
மெட்டுக்கு விரைந்து பாடல் எழுதும் ஆற்றல் பெற்றவர் மருதகாசி. உடுமலை நாராயண கவிக்கு மெட்டுக்கு எழுதுவது சிரமமாக இருந்ததால், இந்திப் பாடல்களின் தமிழ்மொழி மாற்றத்துக்கு மருதகாசியை சிபாரிசு செய்தார். பின்னர், மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான கவிஞராகவும் ஆனார்.
1950 இல் வெளிவந்த பொன்முடி படப் பாடல்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தன. தொடர்ந்து கருணாநிதியின் மந்திரி குமாரி படத்திற்கு மருதகாசி எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றன. குறிப்பாக “வாராய்… நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை!” என்ற முடிவுநிலைப் பாடலும், “உலவும் தென்றல் காற்றினிலே” என்ற பாடலும் நன்றாக அமைந்தன. இவற்றைப் பாடியவர்கள் திருச்சி லோகநாதன், ஜிக்கி ஆகியோர். சுரதாவின் கதை-வசனத்திலும், எப். நாகூர் இயக்கத்திலும் உருவாகி வந்த பாகவதரின் அமரகவி படத்துக்கு பாடல்கள் எழுதினார் மருதகாசி. தொடர்ந்து அவர் எழுதிய சிவாஜியின் தூக்குத் தூக்கி படப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
கவிஞர் வாலி வாய்ப்புத் தேடிய காலத்தில், "நல்லவன் வாழ்வான்' படத்துக்காக "சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்' என்ற பாடலை எழுதினார். இயற்கைத் தடைகளால் அந்தப் பாடலின் ஒலிப்பதிவு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. புதுப்பாடலாசிரியர் வாலி எழுதியதால், சகுனம் சரியில்லை; எனவே, பழம்பெரும் பாடலாசிரியர் மருதகாசியை வைத்து எழுத முடிவெடுத்தனர். மாற்றுப் பாடல் எழுத வந்த மருதகாசி, முதலில் வாலி எழுதிய பாடலைக்கேட்டு வாங்கிப் படித்துப் பார்த்தார்.
""புதுக்கவிஞர் வாலி மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார். இதையே பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறிவிட்டாராம். வளர்ந்து வரும் கவிஞரான தன்னைத் தாய்போல் ஆதரித்த மருதகாசியின் சககவி நேசத்தை மனம் நெகிழ்ந்து கவிஞர் வாலி தனது "நானும் இந்த நூற்றாண்டும்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.தட்சிணாமூர்த்தி, விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகிய அனைத்து இசை அமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி பாடல்கள் எழுதியுள்ளார்.
1960-களிலிருந்து கண்ணதாசனுக்கே வாய்ப்புகள் வழங்கப்பட்டதால், மருதகாசி பின்னுக்குத் தள்ளப்பட்டார். ஒருசில படங்களைத் தயாரித்து பண நஷ்டத்துக்கும், மனக் கஷ்டத்துக்கும் ஆளானார். அதனால் சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றவர்,
எம்.ஜி.ஆரால் மீண்டும் திரையுலகில் மருதகாசிமருதகாசி:
சொந்த ஊருக்கே திரும்பிச் சென்ற மருதகாசி மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் அழைக்கப்பட்டு மீண்டும் சினிமாவில் மறுபிரவேசம் செய்தார். கே.எஸ்.ஜி., தேவர் படங்களுக்கு மட்டும் பாடல்கள் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
தேவரின் தாய்க்குப்பின் தாரம் படத்துக்கு எம்.ஜி.ஆருக்கு புரட்சிகரமான கருத்துக்களுடன் மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே என்ற பாடலை எழுதினார்.
தேவர் பிலிம்ஸின் "விவசாயி' படத்தின் அத்தனை பாடல்களையும் இவரைக் கொண்டு எழுத வைத்தவர் எம்.ஜி.ஆர். "கடவுளென்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி', "இப்படித்தான் இருக்கவேணும் பொம்பளை' போன்ற "விவசாயி' திரைப்படத்தின் பாடல்கள் இன்றும் கருத்துச் செறிவும், சமுதாயக் கண்ணோட்டமும் உடையதாகப் பாராட்டப்படுபவை. தேவர் பிலிம்ஸ் படங்களில் மருதகாசிக்கு நிச்சயமாக ஒரு பாடல் இருக்கும்.
இளைய தலைமுறையினர் படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். அதில் முக்கியமானது, தேவர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த தாய் மீது சத்தியம் படத்தின் மருதகாசி பாடல்கள் அரசுடைமை.
டி.எம்.செளந்தரராஜனை சினிமாவுக்குக் கொண்டுவந்த பெருமை மருதகாசியையே சேரும்.
குரு: உடுமலை நாராயணகவியை தனது குருவாக ஏற்றுக் கொண்டவர்.
என்னுடைய 2 ஆயிரம் பாடல்கள் கவிஞரின் 2 பாடல்களுக்கு ஈடாகாது எனக் கூறியவர்.
பட்டம்: திரைக்கவித் திலகம் என்னும் பட்டம்
அரசுடைமை:
மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும் புத்தகங்களையும், மே 2007 இல் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞரின் வாரிசுகள் 9 பேருக்கும், ரூ.5 இலட்சத்தை, அன்றைய முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
மனதை விட்டு மறையாத பாடல்கள்:
-"மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏறு வூட்டி வயக்காட்டை உழுதுபோடு சின்னக் கண்ணு"
-"வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்"
-"மாசில்லா உண்ணைக் காதலே"
-"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா...
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா"
-"சமரசம் உலாவும் இடமே - நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே"
-"ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லை"
-"கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி, விவசாயி"
- ஆளை ஆளைப் பார்க்கிறார்
-சிரிப்பு… இதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நம் பொறுப்பு
-கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த
-ஆனாக்க அந்த மடம்…
-கோடி கோடி இன்பம் பெறவே
-ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லே
-கடவுள் என்னும் முதலாளி
-வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே
-முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல
-காவியமா? நெஞ்சின் ஓவியமா?
இப்படி திரைப்பட உலகில் 4000 பாடல்களுக்கு மேல் எழுதியவர். கால் நூற்றாண்டுகளாக புகழ்பெற்ற திரையுலக சகாப்தக் கவிஞரும் இவரே.
திரைப்பட பாடலாசிரியர்களின் வரலாற்றில், கண்ணதாசனுக்கு முன்பே அதிகப் பாடல்களை எழுதி சாதனை படைத்த முதல் கவிஞர் என்ற புகழுக்கும் உரியவர் மருதகாசி.
மறைவு: தமிழ் திரைப்பட உலகில் காதலுக்கும் பாட்டு. கல்யாணத்துக்கும் பாட்டு. உழவர்க்கும் பாட்டு. உழைப்பாளிக்கும் பாட்டு என இவர் தொடாத துறையில்லை. எழுதாத பாட்டில்லை. அதாவது 1949–ல் ‘மாயாவதி’ என்ற படத்தில் தொடங்கி 1983–ல் ‘தூங்காத கண்ணின்று ஒன்று’ திரைப்படம் வரை தொடர்ந்த கவிஞரின் திரையுலக சகாப்தம் 29.11.1989 இல் தூங்கியது.
மாவை உடையார் பேரவை.
ஐயா கோ.கருப்பையா மூப்பனார்
ஒரு நதியின் கதை
"சோழ வளநாடு சோறுடைத்து' என்பார்கள். எங்கெங்கு காணினும் பச்சைப் பசேலென்ற வயல் பரப்பு. மரச்சோலைகளில் பச்சைக்கிளிகளும் குயில்களும் கிறீச்சிட்டும் கூவியும் இன்னோசை எழுப்புகின்றன. சலசலத்து ஓடும் காவிரி. அதன் இருபுறமும் பசுமையான மரங்கள்! சற்றே சில அடி தூரத்திலேயே அரசலாறு, திருமலைராஜன் ஆறு, குடமுருட்டி ஆறு என ஆறுகள் அடுத்தடுத்துப் பிரவாகமெடுத்தோடும் கபிஸ்தலம்தான், 1931ஆம் ஆண்டு ஆகஸ்டு 19ஆம் தேதி ஒரு 'தேசிய நதி'யைப் பிரசவித்தது. அந்த நதியைத் தோற்றுவித்தவர்கள் கோவிந்தசாமி மூப்பனாரும் சரஸ்வதி அம்மாளும்தான் என்ற போதிலும்கூட, அந்த நதிக்கு ஒரு நீண்ட பின்னணிகொண்ட மூலவரலாறு உண்டு!
கடந்த ஐந்து தலைமுறைகளாகக் கபிஸ்தலம், சுந்தரபெருமாள் கோவில், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளை மக்கள் 'மூப்பனார் தேசம்' என்றே அறிவார்களாம். அவ்வளவு பாரம்பரியம் மிக்க வரலாற்றுச் சிறப்பு கொண்டது மூப்பனாரின் குடும்பம்.
1770ஆம் ஆண்டு எல்லாக்கி முத்தையா மூப்பனார் நிறுவிய 'ஸ்ரீ வெங்கடாசலபதி அன்னச் சத்திரம் டிரஸ்ட்' அன்று தொடங்கி இன்றுவரை தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு, குறிப்பாக, ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் தேசாந்திரிகளுக்கும் மிகவும் வறுமையில் உள்ளவர்களுக்கும் அன்னதானம் செய்து வருகிறது. அவரது தலைமுறையில் வந்த ராமபத்ர மூப்பனாரும் 'கபிஸ்தலத்து ராஜா' என்றும், 'பெருங்கொடை வள்ளல்' எனவும் பெயர் பெற்றவர்.
அக்காலத்தில், தஞ்சை மண்டலத்திலிருந்த எண்ணற்ற சங்கீத வித்வான்களையும் புலவர்களையும் கலைஞர்களையும் அவர் போற்றிப் போஷித்து வந்தார். 'தமிழ்த் தாத்தா' என்றழைக்கப்படும் உ.வே.சாமிநாதய்யர், ராமபத்ர மூப்பனாரின் சிறப்புகள் குறித்துத் தமது பல்வேறு புத்தகங்களில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார். அவருக்குப் பின்வந்தவர்களான ரெங்கசாமி மூப்பனார், கோவிந்தசாமி மூப்பனார் போன்றோரும் தமது முன்னோர்களின் அடியொற்றியே சிறப்புற வாழ்ந்தனர்.
ரெங்கசாமி மூப்பனார் – செல்லதம்மாள் ஆகியோருக்குப் புதல்வராகப் பிறந்தவர் கோவிந்தசாமி மூப்பனார்.
கோவிந்தசாமி மூப்பனார் – சரஸ்வதியம்மாள் ஆகியோருக்கு மூத்த புதல்வராகப் பிறந்தவர் கருப்பையா மூப்பனார்.
மூப்பனாரின் உடன்பிறந்தோர் 6 பேர். மூன்று சகோதரர்கள், மூன்று சகோதரிகள். ராமாநுஜத்தம்மாள், ரெங்கசாமி, சாந்தா, சுலோச்சனா, சம்பத், சந்துரு.
ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேர் விட்ட பெரிய குடும்பம்! ஒவ்வொருவருக்கும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று விரிந்தபோதிலும், பிரிந்துபோகாத கூட்டுக் குடும்பம்! அன்பு, மகிழ்ச்சி, கட்டுப்பாடு, பெரியோர்களுக்கு மரியாதை, செல்வத்திலும் பணிவு போன்ற நற்குணங்கள் அமையப் பெற்றுள்ளனர்.
கருப்பையா மூப்பனாரின் தந்தை கோவிந்தசாமி மூப்பனார் (ஆர்.ஜி.எம்) நல்ல பரோபகாரி! ஆனாலும் கண்டிப்பானவர்.
ஜி.கே.எம்.மின் இளவல் ஜி.ரெங்கசாமி மூப்பனார் கூறும்போது, "அப்பாவிடம் எங்கள் எல்லாருக்குமே ரொம்ப பயபக்தி இருந்தது. அவர் முன்னாடி நின்று பேசவே பயப்படுவோம். நாங்கள் ஒழுக்கமாக வளரவேண்டும் என்பதற்காகக் கறாராக இருப்பார். அனாவசியமாக ஊர்சுற்ற அனுமதிக்க மாட்டார். அதனால் அண்ணன் (ஜி.கே.எம்.) தமது நண்பனும் அத்தை மகனுமான சிவராஜ் மூப்பனாரோடு வீட்டிலேயே விளையாடுவார். மற்ற சில நண்பர்களும் வீட்டிற்கு வருவார்கள். சடுகுடு, ஃபுட்பால், பாட்மிட்டன் போன்ற விளையாட்டுகளை அபாரமாக விளையாடுவார். சைக்கிள் ஓட்டுவதில் சூரப்புலி! வீட்டு மாடிப்படிகளில் தடதடவெனச் சைக்கிளில் கீழே இறங்குவதைப் பார்ப்பதற்கே திகிலாக இருக்கும். குதிரைச் சவாரி செய்வதில் அலாதிப் பிரியம் அவருக்கு! அதுவே அவருக்குக் கால் ஒடிந்து, படிப்பு கெடும் நிலைக்குச் சென்றது. அதனால் ஆறாவது பாரம் வரையிலும்தான் படித்தார்.
இளம் பிராயத்தில், கும்பகோணத்தில் சாரணர் படையில் துடிப்புமிக்க தலைவராகவும் இருந்துள்ளார். காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது எதிர்நீச்சல் போடுவார். பாபநாசத்திலுள்ள விக்டோரியா போர்டு ஹைஸ் ஸ்கூலில்தான் படித்தார். தமிழில் நல்ல ஈடுபாடு உண்டு. ஆங்கிலத்திலும் அப்போதே சரளமாகப் பேச ஆரம்பித்துவிட்டார். கணக்கில் மட்டும்தான் கொஞ்சம் கஷ்டப்படுவார். (கணக்கின்றி அள்ளித் தரும் பரம்பரைக்குச் சொந்தக்காரர் அல்லவா!) சரஸ்வதி மஹால் லைப்ரரிக்குச் சென்று நிறைய படிப்பார். கல்கி, தேவன், புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி போன்றவர்களின் படைப்புகளை விரும்பிப் படிப்பார். அந்தக் கதைகளில் வரும் நல்ல கேரக்டர்களைப் பற்றி சில நேரங்களில் சிலாகித்துச் சொல்லுவார்'' என்கிறார் ஜி.கே.எம்.மின் இளவல் ஜி.ரெங்கசாமி மூப்பனார் (ஜி.ஆர்.எம்.)
அண்ணனுக்கும் உங்களுக்கும் உள்ள நெருக்கம் பற்றிச் சொல்லுங்களேன்?''
அண்ணனைப் பற்றிக் கேட்டவுடன் பேச ஆரம்பித்த ஜி.ஆர்.எம். கண்ணோரங்களில் லேசாக நீர் திரளுகிறது. "அண்ணன்தான்எங்களுக்குச் சகலமும்! அப்பாவிற்குப் பிறகு அப்பாவின்பால் எங்களுக்கிருந்த பயபக்தியும் மரியாதையும் அண்ணன் மீது தான்! அண்ணன் தம் வாழ்க்கையைத் தேசத்திற்காக ஒப்படைத்துவிட்டார். அதனால் அவருக்கு முடிந்தவரை குடும்பச் சுமைகளும் கவலைகளும் இல்லாமல் இருக்கவும், அவர் விரும்பியபடி ஒற்றுமையாக இருக்கவும் நாங்கள் ஆசைப்படுகிறோம்.
1955இல் அப்பா இறந்ததிலிருந்து இந்தக் குடும்பத்தின் முழுபாரத்தையும் இளம் வயதிலேயே தோளில் சுமந்தவர் அண்ணன். அண்ணன் சொன்னாரென்றால் அதற்கு மறுபேச்சு நாங்கள் பேசுவதில்லை. "டேக் இட் ஈஸி பாலிசி" அண்ணனுடையது. பெருந்தன்மையோடு அனைவரையும் அரவணைத்துச் செல்லுவார். எந்தச் சூழ்நிலையிலும் அவர் பதற்றமடைவதையோ, கலங்கி நின்றதையோ நாங்கள் கண்டதில்லை. வீட்டு நிர்வாகம், நிலபுலன்களைக் கவனிக்கும் நிர்வாகம், கட்சி நிர்வாகம் போன்ற எதிலுமே மிகச் சிறப்பான நிர்வாகத்திறன் கொண்டவர். இங்கே இளம் பிராயத்திலே அவர் நிர்வகித்த (1956 – 1972 ) சந்திரசேகரபுரம் கூட்டுறவுப் பண்டகசாலை இந்தியாவிலேயே மிகச் சிறந்த கூட்டுறவு ஸ்தாபனம் என்ற விருதைப் பெற்றது.'
இவ்வளவு நிர்வாகத்திறன் உள்ள அவர் பெரிய தொழிற்சாலைகள் போன்றவைகளை ஆரம்பித்துச் செல்வத்தைப் பெருக்கியிருக்கலாமே?''
"எவ்வளவோ பேர் இதுபோன்ற யோசனைகளை அவரிடம் சொல்லிப் பார்த்துவிட்டனர். 'செய்யலாம்தான். ஆனால், பிறகு நான் பொதுவாழ்க்கையிலிருந்து விலகி வந்துவிட வேண்டியதுதான்' என்பதுதான் அவரது பதில். பொதுவாழ்க்கையில் தமக்கு இருக்கும் செல்வாக்கைச் சொத்து, செல்வங்களைப் பெருக்கிக் கொள்ளப் பயன்படுத்தக் கூடாது என்பதில் அவர் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளார்'' என்றார் ஜி.ஆர்.எம்.
ஓர் இயல்பான விவசாயிக்கே உரிய எளிய தோற்றமுள்ளவரான 80 வயது நிரம்பிய மூப்பனாரின் தாய்மாமாவான சருக்கை எஸ். பழனிச்சாமி மூப்பனார் கூறியதாவது, "சின்ன வயதிலேயே துருதுருவென்று 'ஆக்டிவ்'வாக இருப்பார். இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தபோது அவருக்குப் பதினாறு வயது. எனக்கு இன்னும் பசுமையாக ஞாபகம் உள்ளது. ஆகஸ்டு 14ஆம் தேதி இரவு. நாங்கள் அனைவரும் தூங்காமல் இந்தியா சுதந்திரமடைந்த அறிவிப்பைக் கேட்டு ஆனந்தமாகப் பேசிக்கொண்டிருந்தோம். மூப்பனாரின் அப்பா கோவிந்தசாமி மூப்பனார் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராயிருந்தார். மறுநாள், நாங்கள் மக்கள் அனைவரையும் எங்கள் வீட்டிற்கு அழைத்தோம். ஆகஸ்டு 15, கோவிந்தசாமி மூப்பனார் வீட்டு வாசலில் தேசியக்கொடி ஏற்ற, நான் உணர்ச்சிப் பெருக்கோடு பேசி முடிக்கவும் கிராம மக்கள் 500 பேருக்கு விருந்து வழங்கப்பட்டது.
மூப்பனாரின் கல்யாணத்தைப் பற்றி அவசியம் சொல்லியே ஆகவேண்டும். அது, இங்குள்ள மக்களின் கிராமத் திருவிழா போல நடந்தது எனலாம். பந்தக்கால் நட்டதிலிருந்து பார்த்தால் ஒரு மாசம் திருமண விழா நடந்தது. திருமண நாளில் ஒவ்வொரு வேளைக்கும் சுமார் 15,000 ஜனங்கள் உணவு அருந்துவார்கள். பெரிய பெரிய சங்கீத விற்பன்னர்கள், மேதைகளின் கச்சேரிகள் நடந்தது. அன்றைக்குப் பிரபலமாயிருந்த நாட்டியக் கலாமணிகள் லலிதா, பத்மினி நாட்டியமாடினார்கள். ஜூன் 1949ஆம் ஆண்டு, 18 வயதிலேயே அவருக்குத் திருமணம் நடந்தது. அவரது அத்தை மகள் கஸ்தூரியைத்தான் கைப்பிடித்தார். இவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் கோவிந்தவாசன், உஷாராணி. தந்தையின் அருங்குணங்களை இளம் வயதிலேயே ஒருங்கே பெற்றவராகத் திகழ்ந்து கொண்டிருப்பவர் கோவிந்தவாசன் (ஜி.கே.வாசன்).
தஞ்சைத் தரணியில் உள்ள பலதரப்பட்ட கோவில் திருவிழாக்களில் இந்தக் குடும்பத்தின் கைங்கரியம் எப்போதும் இருந்து வருகிறது. எங்கள் வீட்டிற்குப் பெருந்தலைவர் காமராஜர் பலமுறை வந்துள்ளார். தஞ்சை மாவட்டத்திறகு வரும்போதெல்லாம் இங்குத் தங்கிச் செல்வது பெருந்தலைவரின் வழக்கம். ஒருமுறை தந்தை பெரியார் கூட வந்திருந்தார். 'நீங்க காமராசரைத் தீவிரமாக ஆதரிப்பது குறித்து எனக்குச் சந்தோஷம். இப்படியே இருங்கள்' என மூப்பனாரை வாழ்த்தினார்.
மூப்பனார் ஒரு மென்மையான ஆன்மிக ஆர்வலர். அடிக்கடி திருப்பதி செல்வார். மண்டகப்படி, சுவாமிக்குக் கல்யாணம் செய்விப்பார். யாருக்குமே தெரியாது, பிரசாதம் தரும்போதுதான் தெரியும். ஆன்மிகப் பெரியவர்களைச் சந்திப்பார். ஆதீன மடாதிபதிகளைப் பார்ப்பார். காஞ்சிப் பெரியவரின்மீது மிகுந்த மரியாதை கொண்டவர். தமிழ்நாடு மட்டுமல்ல, கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை பரந்துபட்ட நட்புள்ளவர்'' என்கிறார் பழனிச்சாமி மூப்பனார்.
பழம்பெரும் காங்கிரஸ்காரரும் சுதந்திரப் போராட்டத் தியாகியுமான வெங்கடாச்சலம், "காங்கிரஸ் பேரியக்கத்திற்கென எந்த ஒரு காரியத்தைத் தந்தாலும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் இயல்பு அவரிடம் இளமையிலேயே இருந்தது. அதிகம் பேசாத, உண்மையான செயல்வீரர் என்றால் அது மூப்பனார்தான்.
1952ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது, சுழன்று சுழன்று பணியாற்றினார். கிருஷ்ணசாமி வாண்டையாருக்கு மூப்பனாரின்மீது எப்போதும் ஒரு வாஞ்சையுண்டு. கட்சிக்கு அன்றைய தினம் ஒரு செல்லப்பிள்ளைதான் மூப்பனார். ஒருநாள் வாண்டையார் என்னை அழைத்து, 'நீங்கள் கபிஸ்தலம் போய் கருப்பையா தம்பியைப் பார்த்து மெம்பர், தீவிர மெம்பர் மற்றும் மாநிலக் குழு உறுப்பினருக்கான விண்ணப்பத்தில் கையொப்பம் வாங்கி வாருங்கள்' என அனுப்பினார். அதன்படி அவரிடம் கையெழுத்து வாங்கி, 21 ரூபாயும் காலணாவும் பெற்று வந்தேன்.
எல்லாரும் வற்புறுத்திய பின்புதான், 1965இல் தஞ்சை மாவட்டக் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடைய காலத்தில்தான் தஞ்சை மாவட்டத்தைக் காங்கிரஸின் வலுவான கோட்டையாக்கிக் காட்டினார். 1967 தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியடைந்த நேரத்தில்கூட, தஞ்சை மாவட்டத்தில் பாதிக்குப்பாதி இடங்களில் வெற்றிபெற்று, தி.மு.க.விற்குக் கடுமையான போட்டியைத் தந்தது'' என்று கூறினார்.
82 வயதைக் கடந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கட்டாரம் ஏ.மாரிமுத்து, தஞ்சை மாவட்டக் காங்கிரஸ் தலைவராக மூப்பனார் இருந்தபோது துணைத் தலைவராகப் பணியாற்றியவர். அவர் கூறும்போது, "என்னைப் போன்ற சாதாரணமான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்களும் பொதுவாழ்க்கûயில் பலதரப்பட்ட பதவிகளை வகிக்கக் காரணமாய் இருந்துள்ளார். ஐயா வந்துவிட்டால் எப்போதும் உற்சாகம்தான்! பலதரப்பட்ட பிரச்சினைகள், சவால்கள் வரும்போது, நாங்களெல்லாம் கலங்கி நின்றபோது, அதையெல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமாக அணுகி, தீர்த்து வைப்பார். ஐப்பசி மாதத்தில் அடைமழை பொழியும் நேரத்தில்கூட கூட்டங்கள் நடத்துவார். தஞ்சை மாவட்டத்தில் – அன்றைய மாவட்டம் என்பது இன்றுள்ள நான்கு மாவட்டங்களை ஒருங்கே கொண்டது. அவற்றில் அவர் கால்படாத கிராமங்களே இல்லை! அந்தக் காலகட்டத்தில், நடந்த பல்வேறு ஊராட்சி ஒன்றிய மற்றும் நகராட்சித் தேர்தல்களில் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற அயராது பாடுபட்டவர். ஒருமுறை விவசாயிகள் போராட்டத்திற்கு ஐயாவின் தலைமையில் 19,000 பேர் சிறை சென்றோம்.
பெருந்தலைவருக்கு ஐயாவின்மேல் தனிப் பாசமே உண்டு. ஐயாவை 'அம்பி' என்று செல்லமாகப் பெயரிட்டுப் பெருந்தலைவர் அழைப்பார்.
'ஐயாவின் ஞாபக சக்தி அபாரமானது. குக்கிராமங்களில் உள்ள தொண்டர்களைக் கூடப் பெயர் சொல்லிக் கூப்பிட்டுப் பேசுவார். என்னைப் போன்ற ஏழை எளிய, பின்தங்கிய குடும்பத்துக் கட்சிக்காரர்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கெல்லாம் தவறாமல் வருவார்'' என்று கூறிமுடித்தார்.
"அந்தக் காலத்திலிருந்தே சிறுபான்மை சமூக மக்களின் இனிய நண்பராக ஐயா இருந்துள்ளார். கட்சிப் பாகுபாடில்லாமல் அன்பு செலுத்துவார். மாற்றுக் கட்சியிலுள்ள சாதாரணத் தொண்டனைக் கூடத் தெரிந்து வைத்திருப்பார். பாபநாசம், அய்யம்பேட்டை, பண்டாரவாடை போன்ற பகுதிகளிலுள்ள இஸ்லாமிய மக்கள் எப்போதுமே ஐயாமீது அபாரமான அன்பு கொண்டவர்கள். இஸ்லாமிய மக்களின் பல குடும்ப நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டுள்ளார்.
பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையார் காலத்தில், சொல்வது அவராக இருந்தபோதிலும் அதைச் செய்து முடிக்கும் செயல்வீரராக ஐயா விளங்கினார். ஒரு தொண்டனுக்குரிய அனைத்து இலக்கணங்களோடும் அந்தக் காலத்தில் அவர் பணியாற்றியதை அருகிலிருந்து நாங்கள் பார்த்துள்ளோம்'' என்கிறார் வலங்கைமான ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் எம்.பக்கீர் முகமது. அவருக்கு இப்போது வயது 83.
"அந்தக் காலத்தில், கும்பகோணத்தில் 'மூப்பனார் பங்களா' என்பது அறிவுத் தாகம் கொண்டோரின் கலாசாலையாக இருந்தது எனலாம். 'லிபரேட்டர்' இதழின் பிரதான செய்தியாளர் சௌகத் அலி போன்றோரெல்லாம் ஐயாவிடம் பேசிக் கொண்டிருப்பதை நாங்கள் கேட்டுப் பயனடைவோம். கட்சிக்கு அப்பாற்பட்ட நண்பர்கள் அவருக்குப் பல தரப்பிலும் உண்டு'' என்றார் மூப்பனாரின் குடும்ப வழக்குரைஞரான 70 வயது நிரம்பிய எம். தாஜதீன்.
மேலும், அவர், "அந்தக் காலத்தில் பல பிராமண வக்கீல்கள் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். எங்கள் இஸ்லாமிய சமூகத்தவர்களே ஒரு கேஸ் என்றால் அவர்களிடம்தான் செல்வார்கள். ஒரு முஸ்லிமாகிய என்னைத் தமது குடும்ப வழக்குரைஞராக ஐயா ஏற்றுக் கொண்டார். என்மீது முழுமையான, பரிபூரணமான நம்பிக்கை வைத்து, எல்லா விஷயங்களையும் என்னிடம் ஒப்படைப்பார்.
இப்போது நினைத்தாலும் என் நெஞ்சம் நெகிழ்கிறது. ஒருமுறை டெல்லியில் நெஜ்மா ஹெப்துல்லாவிடம் என்னை அறிமுகப்படுத்தி, 'இவர் என் ஃபேமிலி அட்வகேட். இவர் எங்கே கையெழுத்திடச் சொன்னாலும் நான் போடுவேன்' என்றார். அந்த அளவுக்கு அவர் குடும்பத்தில் ஒருவராக என்னையும் எண்ணும் அவரது இயல்புக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன். எனக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும்கூட அவரும், அவரது குடும்பத்தாரும் அடிக்கடி வந்து நலம் விசாரித்துச் செல்லும் பண்பு கொண்டவர்கள்'' என்றார்.
பெருஞ்செல்வந்த குடும்பத்தில் பிறந்தாலும் தோற்றத்தில் எளிமையானவர். நகைகள் அணியவும் ஆடம்பர உடை உடுத்தவும் இயல்பாகவே மூப்பனாருக்கு நாட்டமில்லை.
கடல் கடந்த நண்பர்கள் கணக்கின்றி அவருக்கு உண்டென்ற போதிலும், 'பாஸ்போர்ட்' கூட அவர் எடுத்துக்கொண்டதில்லை.
ஆழ்ந்த தேசிய உணர்வும் பொதுவாழ்வில் தூய்மையும் எளிமையும் கனிவும் நிரம்பிய ஓர் அபூர்வ மனிதராக மூப்பனார் விளங்கி வந்திருக்கிறார்.
காவிரிக் கரையில் உள்ள கபிஸ்தலத்தில் பிறந்த ஒரு நதி, கங்கை நதிப் புறத்தில் பிரவாகமெடுத்து ஓடி, இந்திய அரசியல் வரலாற்றில் காலத்தால் அழியாத சாதனைகளைப் படைத்து வந்திருக்கிறது.
(ஆ.கோபண்ணா தொகுத்த 'மக்கள் தலைவர் மூப்பனார்' நூலில்.....
அன்புடன் மாவை உடையார்
குறுநிலமன்னர்குடிகள்
குறுநில மன்னர் குடிகள்.....
சங்காலம் முதல் தமிழகத்தில் சிறப்புற்று விளங்கிய குறுநில மன்னர் குடிகள் பலவாகும்.அவற்றுள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மை சிறப்பு வாய்ந்த குல மரபுகள் குடிகள் சிலவே ஆகும்.
அவையாவன...
அதியமான்மரபு,
மலையமான் (மலைபர், மிலாடுடையார், மழவராயர்,)
சேதிராயர்,
ஆய்,
அதிபர்,
அருவர்,
ஆவியர்,
இருக்குவேளிர்,
ஒளியர்,
கங்கர்,
களப்பாளர்,
காடவராயர்,
குறுக்கையர்,
சம்புவராயர்,
திரையர்,
பழுவேட்டரையர்,
பேசளர்,
முத்தரையர்,
முணபதரையர்,
வாணகோவரையர் என்பார் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தமது அரசுகளை நிறுவி இருந்தனர்.
மிலாடுடையார்.
விகிரம சோழ மிலாடுடையார் கி.பி.985 - 1014
முதலாம் இராசராச சோழன் காலத்திய குறு நில மன்னாவான். இராமன் சித்தவடவன், இராம தேவன் சித்தவடவன், மிலாடுடையார் இராமன் நாட்டடிகள் முதலான வேறு பெயர்களும் இவருக்குண்டு.புளிசையன்சாமி அப்பை என்பார் இவரின் மனைவியாவார். மலாடமா தேவியார் என்றும் இவள் அழைக்கப்பெற்றாள். இத்தேவியார் பாண்டிய மன்னரின் மகள் என்றும் கல்வெட்டு கூறுகிறது. இவ்வம்மையார் எந்த பாண்டிய மன்னரின் மகள் என்று அறிய முடியவில்லை. இம்மன்னன் முதலாம் இராசராச சோழனின்ன் அம்மானாக இருத்தல வேண்டும் என்றும் கருதப்படுகிறது.
இரண்டாம் பராந்தகனான சுந்தரசோழனின் மனைவியருள் ஒருவரான வானவன் மாதேவி விகிரம சோழ மிலாடுடையாரின் மகளாக இருத்தல்வேண்டும் என்றும் வரலாற்று ஆவணங்கள் செப்புகின்றன. இராசராச சோழ்னின் 5வது ஆண்டில்(கி.பி 990)புளிசையன்சாமி அப்பை, திருக்கோவலூர் வீரட்டான உடையார்க்கு நந்தா விளக்கு எரிக்க 96 ஆடுகளை முதற்பொருளாக வழங்கியுள்ளதாகவும் அறிய முடிகிறது.
விகிரம சோழ மிலாடுடையார் காலத்தில் வெண்மானுடைய நீலன் மாதேவனான மலையர் பீமமிலாடப் பேரைரயன் என்பான் அரசு அதிகாரியாகவும் படைத்தலைவனாகவும் இருந்துள்ளான். இவன் மனைவி ப்ரதானி என்பாள் வீரட்டானத்தார்க்கு வழங்கிய விளக்குத்தானம் பற்றி கல் வெட்டு ஒன்றும் உள்ளது.
உத்தமசோழ மிலாடுடையார் (மனைவி கணபதி மயிலாடி)
இராசேந்திரசோழ மிலாடுடையார்
முடிகொண்ட சோழ மிலாடுடையார்
செம்பியன் மிலாடுடையார்
கங்கைகொண்டசோழ மிலாடுடையார்
முதல் நாள் - மஹாத்துவஜாரோகணம் ( திருக்கொடியேற்றம் ) , வெள்ளிபடிச்சட்டத்தில் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா.
இரண்டாம் நாள் - நாற்காலி மஞ்சத்தில் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா .
மூன்றாம் நாள் - காமதேனு கற்பகவிருட்ச வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா.
நான்காம் நாள் - பூதம்,பூதகி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா.
ஐந்தாம் நாள் - மயிலம்மன் பூஜை மற்றும் ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா.
ஆறாம் நாள் - யானை,யாளி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா.
ஏழாம் நாள் - அருள்தரு ஸ்ரீ அபயாம்பிகை உடனாய அருள்மிகு ஸ்ரீ மாயூரநாத சுவாமி திருக்கல்யாணம்.
எட்டாம்
நாள் - நலுங்கு உற்சவம் மற்றும் துலக்கட்டத்திலிருந்து பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா.
ஒன்பதாம் நாள் - ரதாரோகணம் ( திருத்தேர் திருவிழா )
பத்தாம் நாள் - அருள்மிகு கௌரி மாயூரநாதசுவாமி இடபரூபராய் காவிரியில் தீர்த்தம் கொடுத்தருளல்.
அன்னை அருள்தரு ஸ்ரீ அபயாம்பிகை மலையமன்னர் உடையார் வம்சத்தில் உதித்த காரணத்தால் அவ்வம்சத்தினர் ஏழாம் நாள் திருவிழாவாகிய திருக்கல்யாணத்தை தங்கள் வீட்டுப் பெண்ணை
மணமுடித்துக் கொடுப்பது போன்ற சம்பிரதாயங்களுடன் இன்றளவும் மலையமார் உடையார் திருக்கல்யாண அறக்கட்டளை மூலம் மிகவும் சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறார்கள்.
திருமணத்தடைகள் நீங்கவும்,மனதிற்கு பிடித்தமான நல்ல வரன்கள் அமையவும்,நன்மக்கட்பேறு பெறவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருக்கல்யாண வைபவத்தை ஒவ்வொரு ஆண்டும்
கண்டு தரிசித்து பலன் பெற்று வருவது இதன் சிறப்பம்சமாகும்.
சேரர்களின் வம்சமான மலையமான்களின் பார்க்கவ வம்சத்தில் மலையமான்,நத்தமான்,சுருதிமான் என்று மூன்று பகுப்புகள் உள்ளது.குல முதல்வராக தெய்வீகனின் புராணம் கூறப்படுகிறது.பாரி மகளிரை தெய்வீகன் மணந்ததாக கூறப்படுவதற்கு ஆதாரங்கள் அநேகம் இருந்தாலும் அதே தெய்வீகனது மக்களாக கூறப்படும் நரசிங்க முனையரையர்,மெய்ப்பொருள் நாயனார்,சுருதிமான் குலசேகரன் இவர்களின் காலம் கி.பி ஏழு முதல் எட்டாம் நூற்றாண்டுகளுக்குள் உள்ளது.
மேலும் இம்மூவரும் சகோதரர் என்று புராண கதைகள் புனையப்பட்டுள்ளது.சகோதரர் என்னும் போது மூவரும் ஒரே சேர வம்சத்தை சேர்ந்த மன்னர்கள் என்பதே உண்மையாகும்.தெய்வீக ராஜனின் காலமும் இவர்களின் காலமும் வேறுபட்டாலும் தெய்வீகன் மலையமான் நரசிம்ம உடையானின் பார்க்கவ வம்சத்தின் வம்சாவழியில் வந்தவர்கள் தான் இவர்கள் மூவரும் என்ற தகவலை பனிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தெய்வீக ராஜன் பற்றிய செப்பேடு உறுதி செய்கிறது.
மேலும் நாயன்மார் இருவர் சேதிநாட்டில் ஒரே கால கட்டத்தில் ஆண்டதனாலும் சைவ சமயம் சிறந்து விளங்கிய கால கட்டத்தில் மெய்ப்பொருள் மன்னர்,நரசிங்க முனையரையர் இருவரது பெருமையும் கொண்டாடப்பட்டது.சுருதிமான் குலசேகரர் பற்றிய தகவல்கள் ஓரளவு காணப்படும்.அதில் அவர் சுருதிகள்(வேதங்கள்)பல கற்றவர்,பாண்டியன் மகளை மணந்தவர், எல்லா வித்தைகளிலும் சிறந்தவர்.பக்தியின் பாற்பட்டு நாட்டைத் துறந்து தேசாந்திரம் சென்றவர்.என்பன போன்ற குறிப்புகள் காணப்படும்.
சுருதி என்பது வேதத்தை மட்டுமல்லாது ஆதி,பண்டைய,மூலம் என்ற பொருளும் உடையது.ஆகவே தான் சுருதிமான்கள் இக்குலத்தின் ஆதி மூலமான முதன்மையானவர் என்ற பொருளுடைய மூப்பனார் என்ற பட்டம் உடையோர் ஆனார்கள்.
மெய்ப்பொருளார் மற்றும் நரசிங்க முனையரையர் பற்றிய குறிப்புகள் பெரிய புராணம் வாயிலாக கிடைத்துள்ள நமக்கு குலசேகரர் பற்றி ஏதும் குறிப்புகள் இல்லாமல் போகவில்லை.சைவ மதப்பற்றால் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.சைவம் ஓங்கியிருந்த அக்காலத்தே வைணவ ஆழ்வாரான குலசேகரர் அடையாளம் காட்டப்படாமல் பொதுவாக சுருதிமான் குலசேகரர் என குறிக்கப்பட்டுள்ளார்.
கருவூர் கொல்லி மாநகரை தலைநகராக கொண்ட சேர மன்னனான குலசேகரர் கொங்கர் கோமான் என்று அழைக்கப்பட்டார்.சேர வம்சத்து
பார்க்கவ அரசர்களும் கொங்கராயர் என்ற பட்டம் உடையோர்.
சுருதிமான் என்பதன் முழுமையான அர்த்தம் எல்லாவற்றிலும் சிறந்தவர் என்பதே.சுருதிகளில்,போர் பயிற்சிகளில் தேர்ந்தவர்.
அதே போல் குலசேகர ஆழ்வாரும் சுருதிகளில் தேர்ந்தவராயும்,போர் செய்வதில் வல்லமை உடையவராயும் காணப்படுகிறார்.
ராம காதையால் ஈர்க்கப்பட்டு திருவாய் திருமொழி என்ற பாடல்களை ஆழ்வார் பாடியுள்ளார்.இவரின் வீரத்தை கண்டு பாண்டியன் தன் மகளை இவர்க்கு மணம் செய்வித்ததாக அறிய முடிகிறது.ஆழ்வாரது பாடல்கள் பெருமாள் திருமொழி என்று அழைக்கப்படும்.
சுருதிமான் குலசேகரரும் பாண்டியன் மகளை மணந்ததாக உள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக குலசேகர ஆழ்வார் பக்தி காரணமாக
“ஆனான செல்வத்துஅரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்” என்று கூறி நாடு துறந்து துறவு பூண்டு திருவரங்கம் சென்றார்.
சுருதிமான் குலசேகரரும் பக்தி காரணமாக நாடு துறந்து துறவறம் பூண்டு திருக்கோவில்களுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அநேக ஒற்றுமை உள்ள இருவரது வரலாறும் இருவரும் ஒருவரே என்பதை தெளிவாக உணர்த்தும்.
பார்க்கவ வம்சத்தில் சைவ மதம் வலிமை பெற்று விளங்கிய காரணத்தாலும் அனைவரும் தீவிர சைவர்கள் ஆக இருந்ததாலும் சுருதிமான் குலசேகரனே குலசேகர ஆழ்வார் என்ற தகவல் வெளிப்படுத்தப் படவில்லை.குலசேகரர் என்றால் குலத்தின் சிகரமானவர் என்று பொருள் உண்டு.குலத்தின் சிகரமான ஆழ்வாரை,நம் மலையமான்கள் அருமை உணராது உரிமைகோராது இருக்க,குல சேகர ஆழ்வாரை சத்திரிய பெருமை வேண்டி வேறு மொழி பல பேசும் இனத்தாரும்,எங்கிருந்தோ வந்தாரும் கூட உரிமை கொள்ளும்படியாயிற்று.
இற்றை காலத்தே சைவ,வைணவ பேதமும் போயிற்று.
ஆனால் நம் இன வரலாற்றை தமதாக உரிமை கோரி,யாராரோ சத்திரிய பட்டம் வாங்க உதவி செய்யவும்,மாற்றானின் அவப்பெயர் மறைக்கவும், என இன்னும் எவ்வளவு காலத்திற்கு பார்க்கவ குல வள்ளல்கள் வள்ளல்குடியின் வள்ளண்மையோடு குல முதல்வனை விட்டுக்கொடுத்து உதவுகின்றார் என பார்ப்போம்
சேர வம்சம் என்று கூறுபவர்கள் அனைவரும் எங்கிருந்தோ இங்கே கொண்டு வரப்பட்ட இனத்தவரும்,சேரனுக்கு துளியும் சம்பந்தமே இல்லாத பல்லவ குடிமக்களுமே ஆவார்.ஆனால் அவர்கள் அனைவருக்கும் குலசேகர ஆழ்வார் நம் இனத்தவர் என்று நன்றாகவே தெரியும்.
பல்லவ குடிகள் அரச குடியாக கூறிக் கொள்வதும்,ஆதாரம் கொடுத்து சத்திரிய பட்டம் வாங்கி விட்டோம் என்று கூறிக் கொள்தல் எப்படி சாத்தியம்?
இன அரசர்களை உரிமை கோரினால் மட்டுமே சத்திரியர் என்று பட்டம் பெறவும் முடியும்.அவர்கள் கீழ் தளத்திலிருந்து வரலாற்றில் மேலே வரவும் முடியும்.
இவர்கள் காட்டும் ஜாதி நூல்கள் எல்லாம் பொதுவில் சமர்ப்பிக்க ஆதாரம் வேண்டி தந்திரமாக புனைவாக பிற்காலத்தில் எழுதிக்கொண்டவையே. இவர்கள் சத்திரியர் என கூறிக்கொள்ள மன்றம் வரை செல்லும் அவசியம் ஏற்பட இவர்களின் பூர்வ கதையும் ஓர் முக்கிய காரணம். இவர்கள் உண்மையில் யார் என்பதை மறைக்கவும்,தம் மூதாதையரில் இருந்து தங்களை வேறுபடுத்தி காட்ட வேண்டிய நிர்பந்தம் காரணமாகவும் சத்திரியராக கூறிக்கொள்ளும் அவசியம் இவர்களுக்கு உண்டாயிற்று.
இவர்கள் காட்டிய பாதையில் போய் சத்திரியர் என்று கூறிக்கொள்ள தந்திரம் பல செய்தனர் பார்த்தாலே தீட்டு என்று ஒடுக்கப்பட்ட மற்றொரு பிரிவினர்.கடந்த இருநூறு வருடங்களாக இவர்கள் எல்லாம் வறுமையில் வாடிய காலத்திலும் கூட சாதிய உயர்வு பெற தமிழ் புலவர்களை வைத்து நம் இன அரசர்களின் பெருமைகளை தமதாகக் கூறி அவர் இனமாக ஆதாரமற்ற கட்டுக்கதைகள் புனைந்து கொண்டனர்.போலியான ஜாதிய நூல் பல இயற்றிக் கொண்டனர்.அவைகள் ஆதாரமற்றவை என்பதால் செல்லாமல் போயிற்று.தற்போது பொருளாதார உயர்வு பெற்ற இவர்களில் அநேகரும் சேர்ந்து ஜாதிக்கு கதை எழுத காசு கொடுத்து அறிஞர்கள் சிலரை வளர்க்கின்றனர்.
வரலாற்றின் அடிப்படை விசயங்களை மாற்றி எழுதிக்கொண்டு மாற்றார் இன அரசரை தம் இனமாக கூறுதல் அசிங்கமானது என்று தெரிந்தே துணிந்து இக்கருமத்தை செய்கின்றனர், ஏன் என்றால் அவர்களின் சாதியின் பின்புலம் ஏதென்றே யாரும் அறிய ஏலாது.அவ்வளவு ஏன் அவர்களுக்கே தெரியாது.ஆயினும் இன ஒற்றுமை பாசம் என்பது இம்மக்களுக்கு உள்ளது போன்று அனைவருக்கும் இருக்க வேண்டும்.மக்களின் வாழ்க்கையில் ஒற்றுமை ஓங்கி நாட்டிலும் செழிப்பு உண்டாகும்.நல்ல முன்னேற்றம் காரணமாகவும்,ஜாதிய உயர்வு வேண்டியும் இவர்கள் செய்வதெல்லாம் வரலாற்றுப் பிழையானதாயிருந்தாலும் அதற்கு ஒரே காரணம்…யாதொரு பிழையுமின்றி உழைத்து வாழ்ந்த முன்னாளிலேயே பார்த்தால் தீட்டு என்று ஒடுக்கப்பட்ட கொடும் சதியான வரலாற்றை பின்னாளில் யாராவது இவர்கள் சமூக நிலைப்பாடு இதுவென சுட்டிகாட்டி இழிவுண்டாக்கி குத்திக் காட்டினால் அப்போது உள்ள இவர்களின் சந்ததிகள் மனம் உட்கி வருந்த நேரிடுமே என்ற வருத்தத்தாலும்,அக்கறையாலும் இவர்கள் இவ்வாறு போலி கதைகள் பல செய்கின்றனர் என்பதே வெட்டவெளிச்சம்.இதனால் இதை ஒரு குறையாகக் கருத வேண்டியதில்லை.
“பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின்”‘..
சேரமான் பெருமாள் மேலோர் கீழோர் அனைவருக்கும் பொதுவானவரே.
ஆனால் சுருதிமான் குல சேகர ஆழ்வாரே நம் குல முதல்வர் என்பதை சேரமான் மலையமானின் பார்க்கவ குல செல்வங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள்
குலசே கரனென்றே கூறு.
ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே
வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை
வீரங் கெடுத்தசெங் கோல் கொல்லி காவலன் வில்லவர்கோன்
சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே.
பார்க்கவ குல உடையார்களின் "சிறிய கிருஷ்ணாபுரம் செப்பேடு" உண்மை நிலையை உணர்த்துவது.ஆதாரமில்லாமல் எழுதுபவர் கூற்று இனி எடுபடாது.
பார்க்கவ குலம் பற்றி சொல்லவெண்டுமென்றால் "தெய்வீக மன்னன்" பற்றி கூறுதல் அவசியம்.
திருக்கோவலூரை ஆண்ட தெய்வீக மன்னனின் வழி வந்தோரே பார்க்கவ குல உடையார்கள்.
தெய்வீக ராஜன் மூவேந்தர் பகை: தெய்வீக ராஜன் திருக்கோவலூரை ஆளத் தொடங்கியபோது அவரிடம் இருந்த பச்சைப் புரவி(குதிரை) ஒன்றைப் பற்றி கேள்விப்பட்டு அதனை வாங்கி வருமாறு தமது அமைச்சர்களை மூவேந்தர்கள் அனுப்பினர்.
குதிரை வேண்டுமானால் போரிட்டு பெற்றுக் கொள்ளுங்கள் என தெய்வீக மன்னன் தெரிவிக்க மூவேந்தர்களும் போரிட வந்தனர்.ஆனால் போரில் மூவேந்தரும் தோல்விகண்டனர்.
தோல்வி கண்ட மூவேந்தர்களும் தெய்வீக மன்னன் வெற்றி பெற்றார் என ஒப்புதல் வழங்கி எந்த நிலப்பகுதிகள் அவருக்கு வெண்டும்ன்று கேட்க தாம் பச்சைப் புரவியேறி அது ஒரு வட்டம் வரும் அளவுள்ள நாடு போதுமென்று கூறினார்.
இதனை கீழ்க்காணும் பாடல் தெரிவிக்கிறது:
"வடதிசைக் கடியாறு குணதிசைக் கரிய கடல் வளம் வராத குடதிசைக்குக் கொல்லிமலை தெந்திசைக்கு திவ்வியாறு குலவுமெல்லை யடவுபட கணப்பொழுதிலொரு வட்டஞ் சூழ்ந்த பரியதன்மேல் வந்து புடவிதனிலறச ரொருமூவர் திருமுன்பு போந்தான் வேந்தன்"
இந்தப் பாடல் கிருஷ்ணாபுரம் செப்பெட்டில் உள்ளது.
மூவேந்தர்களும் குதிரை நடந்த தேசமெல்லாவற்றையும் தெய்வீகராசனுக்கு விட்டுக் கொடுத்து, அம்மன்னனுக்கு திருக்கோவிலூரில் பட்டாபிஷேகம் செய்து வைத்தார்கள்.
இத்தகைய பெருமை மிகுந்த தெய்வீகராசன் வழி வந்தவர் தமது இனத்திற்கு இம்மையில் புகழும், மறுமையில் வீடுபேறும் பெறுவதற்காக பொதுவாக ஒரு மடம் ஏற்படுத்த முடிவு செய்தனர்.
இதனை சிறிய கிருஷ்ணாபுரம் தெய்வீகராசன்
செப்பேடு தெளிவாகத் தெரிவிக்கிறது.
அந்த செப்பேட்டில் தெய்வீகராசன் வழிவந்தோர் யார் யார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செப்பேட்டில் அந்த செய்தி வரும் பகுதி :
"சேர மண்டலம், சோழ மண்டலம், பாண்டிய மண்டலம், கொங்கு தேசம் 4 மண்டலத்துண்டாகிய மலைய மன்னர், நத்த மன்னர், பாளையக்காரராகிய பண்டாரத்தார், நயினார், உடையார், சீமை நாட்டார், சில்லரை கிராமத்து வன்னியர் யிவர்கள் அனைவருக்கும் பொது மடம் கிரமமாய் நடந்து வருகிற படியினாலே", ஆண்டு வர்த்தனையாகக் கட்டளையிட்ட சுவாதியம்:
தணிடிகை(பல்லக்கு) துரைமாருக்குப் பணம் 10 குதிரை, குடை பெற்ற் பேருக்குப் பணம் 5 தலைக்கட்டுக்குப் பணம் 2 கலியாணத்துக்குப் பணம் 2 மாப்பிள்ளை வீட்டுக்குப் பணம் 2
இது பிரகாரம் ஆண்டுக் காண்டு தம்பிரான் வந்த உனே பட் அரிசிகளும், பணமும், வெற்றிலையும் கொடுத்துத் தங்கள் கீர்த்தி போல கிரமமாய் நடப்பித்துக் கொண்டு வரவேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கிளியூர் மலையமான்கள்
திருமுடிக்காரி. திருக்கோலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிநடத்திய மலைய மன்னன்.
முள்ளூரில் இவனை எதிர்த்த ஆரிய மன்னர் பலர், இவனது ஒரே வேல் படைக்கு அஞ்சி ஓடினார்கள் என்பதை நற்றிணைப் பாடல் (170) ஒன்று கீழ்க்காணும் வகையில் புகழ்ந்துப் பேசுகிறது:
“ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப்
பலருடன் கழிந்த ஒள்வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடியாங்கு”
காரியின் வழித்தோன்றல்கள், திருக்கோலூரையும் சுற்றுவட்டப் பகுதிகளையும் வழிநடத்தினர். இம்மலையமான்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் கிளியூர் மலைய மான்களாவர்.
இவர்கள் குறித்து ஆய்வறிஞர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் (நூல்: பிற்கால சோழர் சரித்திரம்) தரும் தகவல்கள் பின்வருமாறு:
“கிளியூர் மலையமான்கள் முதற்குலோத்துங்கச் சோழன் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த குறுநில மன்னர்கள். இவர்கள் தென்னார்க்காடு ஜில்லாவில் அதன் வடமேற்குப் பகுதியாய் அமைந்திருந்த சேதி நாட்டை ஆட்சி புரிந்து கொண்டிருந்த குறுநில மன்னர்கள். மலையமான் மரபினர். இவர்கள் வழிவழி ஆண்டு வந்தமை பற்றி அந்நாடு மலையமான் நாடு எனவும் மலாடு எனவும் வழங்கப்பட்டு வந்தது உணரற்பாலது.
இவர்கள் சேதிராயர் எனும் பட்டமுடையவர்கள். கிளியூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டவர்கள். குலோத்துங்கச் சோழனது ஆட்சி காலத்தில் சேதி நாட்டிலிருந்து அரசாண்ட சிற்றரசர்கள்.
கிளியூர் மலையமான் பெரிய உடையானான இராசராச சேதிராயன், சந்திரன் மலையனான இராசேந்திர சோழ மலையமான், சூரியன் சாவன சகாயனான மலையகுல ராசன், சூரியன் மரவனான இராசேந்திர சோழ மலையகுல ராசன், சூரியன் பிரமன் சகாயனான மலையகுல ராசன்.
இவர்களில் இறுதியில் குறிப்பிடப்பெற்ற மூவரும் உடன்பிறந்தாராகவும் இராசேந்திர சோழ மலையமானுக்கு நெருங்கிய தொடர்புடையவராகவும் இருத்தல் வேண்டும்.
இவர்கள் எல்லோரும் குலோத்துங்கச் சோழனது ஆட்சியின் முற்பகுதியில் இருந்தவராவர். இவ்வேந்தனது ஆட்சியின் பிற்பகுதியிலிருந்த சேதி நாட்டுச் சிற்றரசன், கிளியூர் மலையமான் நானூற்றுவன் அத்திமல்லனான இராசேந்திரன்களின் கொடை குறித்தக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
“பிற்காலச் சோழர் காலத்தில் வாழ்ந்த மலையமான்கள் வன்னிய வகுப்பினர் என்பதற்கானக் கல்வெட்டுச் சான்று இருப்பதாகத்” தெரிவிக்கிறது தமிழ் வளர்ச்சி இயக்ககம் வெளியிட்ட ‘தமிழ்நாட்டு வரலாறு வரலாறு சோழ பெருவேந்தர் காலம்’ எனும் நூல்.
நாட்டின் தலைநகராக இருந்ததோடு, ஆட்சி நடத்தும் தலைவர்களையும் கொடுத்த ஊர் கிளியூர்.
இப்போது, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை வட்டத்தில், பெரியசெவலை அருகில் சின்னஞ்சிறு கிராமமாகக் காட்சியளிக்கிறது..!
01. ஒப்பொருவருமில்லா நாயனார்க் கோயில் ( அரையணிநல்லூர்)
02. அகத்தீச்சரம் (ஆமூர்)
03. கரிவரதராசப் பெருமாள் கோயில் இராசராச விண்ணகர்.(ஆறகளூர்)
04. இராசநாராயண விண்ணகர் (எலவானாசூர்)
05. ஊர் பாகங்கொண்டருளிய நாயனார்க்கோயில் (எலவானாசூர்)
06. திருச்சக்கரத்தாழ்வார்க் கோயில் (எலவானாசூர்)
07. திருமுற்றத்தாழ்வார்க் கோயில் (எலவானாசூர்)
08. திருமேற் கோயிலாழ்வார்க் கோயில் (எலவானாசூர்)
09. வானவன்மாதேவிவிண்னகர் (எலவானாசூர்)
10. ஸ்ரீ பதியாழ்வார்க் கோயில் (எலவானாசூர்)
11. பொன்பரப்பின ஈச்சரம் (குகையூர்)
12. தான்தோன்றீச்சரம் (சணப்பை)
13. வைரீச்சுரம் (சணப்பை)
14. திருர்ப்புலிப் பகவ நாயனார்க் கோயில் (சித்தலிங்கமடம்)
15. இடபத்துறையுடைய நானார்க் கோயில் (செங்கண்மா)
16. சமணர் கோயில் (சோழவாண்டிபுரம்)
17. காளத்தீச்சுரம் (திருக்காளாத்தி)
18. இடைக்கழி ஆழ்வார்க் கோயில் (திருக்கோவலூர்)
19. ஆகாரசூர விண்ணகர் (திருக்கோவலூர்)
20. குகனீச்சரம் (திருக்கோவலூர்)
21. வீரட்டானேசசுரம் (திருக்கோவலூர்)
22. மேலை, கீழைப் பள்ளிகள் (திருநருங்கொண்டை)
23. தொண்டீச்சரம் (திருநாவலூர்)
24. ஆபத்சகாயேச்சுரம் (திருப்பழனம்)
25. திருநாகேச்சுரம் (திருப்பாலைப்பந்தல்)
26. சந்திரபிரபு சாமி கோயில் சமணக்கோயில் (திருமலை)
27. மணிகண்டேச்சுரம் - உத்தமசோழீச்சுரம் (திருமால்புரம்)
28. மிலாடுடையார் (திருவகத்தீஸ்வரம்)
29. அருணாசலேச்சுரம் (திருவண்ணாமலை)
30. அபிராமேச்சுரம் (திருவாமாத்தூர்)
31. திருவருள் துறை ( திருவெண்ணை நல்லூர்)
32. மதுராந்தகச் சோழீச்சுரம் ( தொழுதூர்)
33. பொற்குடம் கொண்டருளிய நாயனார்க் கோயில் (நெய்வனை)
34. உத்தரீச்சுரம் (புதுப்பேரூர்)
35. தான்தோன்றீச்சுரம் (பெரும்புனம்)
36. காக்கா நாச்சியார் கோயில் (மணலூர்ப்பேட்டை)
37. சேதிகுல மாணிக்கப் பெருங் கோயில்
38. இராமலிங்ககேச்சுரம் (மாரங்கியூர்)
39. சேதிகுல சிந்தாமணீச்சுரம் (விக்கிரவாண்டி)
விகிரம சோழ மிலாடுடையார் கி.பி.985 - 1014
முதலாம் இராசராச சோழன் காலத்திய குறு நில மன்னாவான். இராமன் சித்தவடவன், இராம தேவன் சித்தவடவன், மிலாடுடையார் இராமன் நாட்டடிகள் முதலான வேறு பெயர்களும் இவருக்குண்டு.புளிசையன்சாமி அப்பை என்பார் இவரின் மனைவியாவார். மலாடமா தேவியார் என்றும் இவள் அழைக்கப்பெற்றாள். இத்தேவியார் பாண்டிய மன்னரின் மகள் என்றும் கல்வெட்டு கூறுகிறது. இவ்வம்மையார் எந்த பாண்டிய மன்னரின் மகள் என்று அறிய முடியவில்லை. இம்மன்னன் முதலாம் இராசராச சோழனின்ன் அம்மானாக இருத்தல வேண்டும் என்றும் கருதப்படுகிறது.
இரண்டாம் பராந்தகனான சுந்தரசோழனின் மனைவியருள் ஒருவரான வானவன் மாதேவி விகிரம சோழ மிலாடுடையாரின் மகளாக இருத்தல்வேண்டும் என்றும் வரலாற்று ஆவணங்கள் செப்புகின்றன. இராசராச சோழ்னின் 5வது ஆண்டில்(கி.பி 990)புளிசையன்சாமி அப்பை, திருக்கோவலூர் வீரட்டான உடையார்க்கு நந்தா விளக்கு எரிக்க 96 ஆடுகளை முதற்பொருளாக வழங்கியுள்ளதாகவும் அறிய முடிகிறது.
விகிரம சோழ மிலாடுடையார் காலத்தில் வெண்மானுடைய நீலன் மாதேவனான மலையர் பீமமிலாடப் பேரைரயன் என்பான் அரசு அதிகாரியாகவும் படைத்தலைவனாகவும் இருந்துள்ளான். இவன் மனைவி ப்ரதானி என்பாள் வீரட்டானத்தார்க்கு வழங்கிய விளக்குத்தானம் பற்றி கல் வெட்டு ஒன்றும் உள்ளது.
உத்தமசோழ மிலாடுடையார் (மனைவி கணபதி மயிலாடி)
இராசேந்திரசோழ மிலாடுடையார்
முடிகொண்ட சோழ மிலாடுடையார்
செம்பியன் மிலாடுடையார்
கங்கைகொண்டசோழ மிலாடுடையார்
1. திருக்கோவலூர் வீரடடானேஸ்வரர் கோயில் (முதலாம் பராந்தகச் சோழன் ஆண்டு 28 கி.பி 935)
2. சித்தலிங்கமடம் வியாக்கிர பாதேஸ்வரர்க் கோயில் அர்த்த மண்டபத்து வடக்குச்சுவர் (முதலாம் குலோத்துங்க சோழன் ஆண்டு 49 கி.பி 1119)
3. திருக்கோவலூர் திருவிக்கிரமப் பெருமாள் கோயில் இரண்டாம்பிரகாரம் தெற்குச்சுவர் ( இரண்டாம் இராசராச சோழன் ஆண்டு 2 கி.பி. 1148)
4. திருக்கோவலூர் திருவிக்கிரமப் பெருமாள் கோயில் இரண்டாம்பிரகாரம் தெற்குச்சுவர் ( இரண்டாம் இராசராச சோழன் ஆண்டு 14 கி.பி. 1160)
5. திருக்கோவலூர் திருவிக்கிரமப் பெருமாள் கோயில் இரண்டாம்பிரகாரம் வடக்குச்சுவர் ( இரண்டாம் இராசதிராச சோழன் ஆண்டு 5 கி.பி. 1168)
6. திருக்கோவலூர் திருவிக்கிரமப் பெருமாள் கோயில் இரண்டாம்பிரகாரம் வடக்குச்சுவர் ( இரண்டாம் இராசதிராச சோழன் ஆண்டு 7 கி.பி. 1170)
நரசிங்கவர்மர் என்ற அபிடேகம் பண்ணி முடி கவித்த மிலாடு 2000 யூடுயும் ஆண்ட மிலாடுடையார் நரசிங்கபன்மர்” - 123 of 1900
முனைவர் மு.பொன்னவைகோ
முனைவர் மு. பொன்னவைக்கோ இவர் தென்னாற்காடு மாவட்டத்தில் செங்கமேடு என்னும் சிற்றூரில் பெருநிழக்கிழார் முருகேச உடையார் அவர்களுக்கும், அருள்நிற...

-
வாலிகண்டபுரம் கல்வெட்டு (கி.பி.1227) நத்தமான்களை "98 இடங்கை பிரிவினரில் ஒருவர் என்றும் சித்திரமேழி பெரிய நாடான யாதவ குல தல...
-
மலையமன்னர் மடம்; பழனியில் மலையமான் மடம் இந்த மடம் ஆரம்ப காலத்தில் இருந்தே அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது . இந்த மடத்தை நிறுவியவர்கள்...
-
#இருங்கோவேள்_சுருதிமான்; மூன்றாம் ராஜ ராஜ சோழனின் (கி.பி.1233) ஊட்டத்தூர் கல்வெட்டு "சுருதிமான் நாயன் சோரனான இருங்கோளன்...